ஆஸ்திரேலிய சாலை விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த 2 சகோதரிகள் பலி
மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் நிகழ்ந்த சாலை விபத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சகோதரிகள் 2 பேர் உயிரிழந்தனர்.
ஆஸ்திரேலியாவின் வடகிழக்கு மாகாணமான குயின்ஸ்லாந்தில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் படித்துகொண்டே நர்சாகவும் பணியற்றி வந்தவர் அன்ஜூமோல் ( 23). அவரது சகோதரி ஆஷா மேத்யூ (18) அதே கல்லூரியில் பயின்று வந்தார். இவர்கள் இருவரும் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்கள்.
கடந்த திங்கள்கிழமை இவர்கள் காணாமல் போனதாக அவரது உறவினர்கள் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டதில், குயின்ஸ்லாந்து பகுதியில் நடைபெற்ற சாலை விபத்தில் இருவரும் உயிரிழந்தது தெரியவந்தது.
அப்பகுதியில், காரில் சாலையை கடந்து செல்ல முயன்ற போது டிரக் மோதியதில் இருவரும் உயிரிழந்துள்ளனர் என கூறப்படுகிறது. இதையடுத்து, உயிரிழந்த சகோதரிகள் இருவரது உடலையும் இந்தியாவுக்கு கொண்டு வருவதற்காக இந்திய தூதரகத்தின் உதவியை அவர்களது உறவினர்கள் நாடியுள்ளார். அவர்களின் தாய் தந்தை ஆகியோர் இந்தியாவில் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.