ஏமனில் தவிக்கும் இந்தியர்களை மீட்க கொச்சியிலிருந்து கிளம்பிய 2 கப்பல்கள்
ஏமன்: ஏமன் நாட்டில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை தாய்நாட்டுக்கு அழைத்துவர மத்திய வெளியுறவு துறை அமைச்சகத்தின் ஏற்பாட்டின் பேரில் கொச்சி துறைமுகத்தில் இருந்து இன்று 2 கப்பல்கள் ஏமனில் உள்ள ட்ஜிபவுட்டி துறைமுகத்துக்கு விரைந்துள்ளன.
அரேபிய நாடுகளில் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள நாடான ஏமனில் உள்நாட்டுப்போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளதால், அதிபர் அபேத் ரப்போ மன்சூர் காதியின் வேண்டுகோளின் பேரில் ஏமன் அரசுக்கு ஆதரவாக சவுதி அரேபியா நேற்று முன்தினம் வான்வழி தாக்குதலை தொடங்கியது.
இதனால், அங்கு வாழும் இந்தியர்களை ஏமனில் இருந்து வெளியேற்ற அங்குள்ள இந்திய தூதரகத்தின் மூலமாக இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் முயன்று வருகின்றது.
உள்நாட்டுப்போரினால் பாதிக்கப்பட்டுள்ள ஏமன் நாட்டில் ஆண்கள், பெண்கள் என சுமார் 3500 இந்தியர்கள் தங்கியுள்ளனர். பெண்களில் பலர் நர்ஸ்களாகவும், ஆண்களில் பலர் அலுவலக பணியாளர்களாகவும், கூலி தொழிலாளிகளாகவும் வேலை செய்து வருகின்றனர்.
அங்குள்ள இந்தியர்கள் தொடர்பு கொள்ள 24 மணி நேர அவசர உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒருகட்டமாக சுமார் 80 இந்தியர்கள் தலைநகர் சனாவில் இருந்து ஏமனி ஏர்வேஸ் விமானம் மூலம் இன்று ட்ஜிபவுட்டி நகரை வந்தடைந்தனர்.
சுஷ்மா ஸ்வராஜ்
ஏமன் அரசுடன் தொடர்பு கொண்ட இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் ஒரு நாளைக்கு 3 மணிநேர காலக்கெடுவில் அங்குள்ள இந்தியர்களை ஏர் இந்தியா விமானங்கள் மூலம் தாய்நாட்டுக்கு அழைத்துவர ஏற்பாடு செய்துள்ளதாக மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நேற்று தெரிவித்தார்.
இதே போல், சுமார் 1500 பேரை ஏற்றிவரக்கூடிய கப்பல்களை ஏமனுக்கு அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் தனது ‘ட்விட்டர்' பக்கத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இரண்டு கப்பல்கள்
இந்நிலையில், ட்ஜிபவுட்டி நகரில் தங்கியுள்ள இந்தியர்களை தாய்நாட்டுக்கு அழைத்து வருவதற்காக இரு கப்பல்கள் இன்று காலை கேரள மாநிலத்தில் உள்ள கொச்சி துறைமுகத்தில் இருந்து புறப்பட்டு சென்றன. இந்த இரு கப்பல்களிலும் டாக்டர்கள், நர்சுகள், பணியாளர்கள், கப்பல் சிப்பந்திகள் என சுமார் 150 பேர் சென்றுள்ளனர்.
1200 இந்தியர்கள்
இந்திய கடலின் வெளிப்புற எல்லையில் இந்திய கடற்படைக்கு சொந்தமான படகுகளின் பாதுகாப்புடன் சர்வதேச கடற்பகுதியை நோக்கி இந்த கப்பல்கள் சென்று கொண்டுள்ளன. இவற்றின் மூலம் ஏமனில் இருந்து சுமார் 1200 பேரை இந்தியாவுக்கு ஏற்றிவர முடியும்.
7 நாட்கள் பயணம்
இந்த கப்பல்கள் இன்னும் 7 நாட்களில் ட்ஜிபவுட்டி துறைமுகத்தை சென்றடையும். அங்கு காத்திருக்கும் இந்தியர்களை ஏற்றிக்கொண்டு அடுத்த ஒரு வாரத்தில் இந்தியா வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த 15 நாட்களுக்கும் தேவையான அத்தியாவசிய மருந்துப்பொருட்கள், உணவுப்பொருட்கள் போன்றவை அந்த கப்பல்களில் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக கொச்சி துறைமுக அதிகாரிகள் தெரிவித்தனர்.