1000 லைக்ஸ்.. இல்லைன்னா விட்டுடுவேன்.. 15வது மாடியில் குழந்தையை தொங்கவிட்டு மிரட்டியவருக்கு சிறை!
ஃபேஸ்புக் பக்கத்தில் 1000 லைக்குகளை கொடுக்காவிட்டால் குழந்தையை கீழே போட்டுவிடுவேன் என மிரட்டிய நபருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அல்ஜைர்ஸ்: பேஸ்புக் பக்கத்தில் 1000 லைக்குகளை கொடுக்காவிட்டால் குழந்தையை கீழே விட்டுவிடுவேன் என 15வது மாடியில் இருந்து மிரட்டி நபருக்கு அல்ஜீரியா அரசு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. குழந்தையின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாக இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
அல்ஜீரியாவில் பல அடுக்குமாடி உயரம் கொண்ட ஒரு கட்டடத்தின் 15வது மாடியின் ஜன்னல் வழியாக ஒரு குழந்தையை வெளியே தூக்கி பிடித்திருப்பது போன்ற போட்டோ பேஸ்புக்கில் போடப்பட்டது. மேலும் அந்த போட்டோவுக்கு 1000 லைக்குகள் கொடுக்காவிட்டால் குழந்தையை கீழே போட்டுவிடுவேன் என்றும் கேப்ஷன் போடப்பட்டிருந்தது.
அந்த போட்டோவில் கீழே நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்கள் சிறிய துரும்பை போல் தெரிகின்றன. அவ்வளவு உயரத்தில் இருந்து குழந்தையை வெளியே போடுவது போன்ற அந்த போட்டோ பார்ப்பவர்களை பதைபதைக்க செய்தது.
தீயாக பரவிய போட்டோ
அந்த போட்டோ சமூக வலைதளங்களில் தீயாக பரவியது. அந்த போட்டோவை பார்த்த பலர், குழந்தையை வெளியே தூக்கி பிடித்திருக்கும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
போட்டோஷாப் செய்யப்பட்டது
இதையடுத்து அந்த நபர் கைது செய்யப்பட்டார். அப்போது அந்த போட்டோ உண்மையானது அல்ல. அங்கு பாதுகாப்பு கம்பிகள் உள்ளன. ஃபேஸ் புக் யூசர்கள் போட்டோஷாப் செய்து வெளியிட்டுள்ளதாக கூறினார்.
2 ஆண்டுகள் சிறை
ஆனால் இதனை ஏற்க மறுத்த நீதிபதி போட்டோவில் குழந்தை ஆபத்தைக் கண்டு பயப்படுவது தெளிவாக தெரிகிறது என்றார். மேலும் குழந்தையின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்திய அந்த நபருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்தார்.
கெஞ்சியும் ஏற்காத நீதிபதி
விளையாட்டுக்காகத்தான் அந்த நபர் செய்தார் என குழந்தையின் தந்தை எவ்வளவோ கெஞ்சியும் நீதிபதி ஏற்கமறுத்து விட்டார். முன்னதாக அந்த போட்டோவில் இருப்பது குழந்தையின் தந்தை என தவறான தகவல் பரவியது குறிப்பிடத்தக்கது.