ஆப்கான் குண்டூஸ் மருத்துவமனை மீது கொடூரமாக வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா - 22 பேர் பலி!
காபூல்: ஆப்கானிஸ்தானின் குண்டூஸ் மாகாணத்தில் மருத்துவமனை மீது அமெரிக்கா விமானங்கள் சரமாரியாக குண்டுகளை வீசியத் தாக்கியதில் 22 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். உலக நாடுகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ள இத்தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா, தலிபான்கள் மீது இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதலின் போது தவறுதலாக மருத்துவமனை பாதிக்கப்பட்டுவிட்டது எனக் கூறியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் குண்டூஸ் மாகாணத்தை தலிபான் தீவிரவாதிகள் கைப்பற்றி இருந்தனர். இதைத் தொடர்ந்து பெரும் தாக்குதல்களை நடத்தி ஆப்கானிஸ்தான் ராணுவம் குண்டூஸ் மாகாணத்தை மீட்டது.
இருப்பினும் அம்மாகாணத்தின் பல பகுதிகளில் தீவிரவாதிகள் பதுங்கி இருந்ததைத் தொடர்ந்து அமெரிக்கா விமானங்கள் அந்த மறைவிடங்கள் மீது தாக்குதலை நடத்தின. இந்தத் தாக்குதலில் குண்டூஸ் மருத்துவமனை ஒன்றும் சிக்கியது. ஆனால் அம்மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தது அப்பாவி பொதுமக்கள்.
அமெரிக்காவின் இத்தாக்குதலில் 22 பேர் பலியாகினர். பொதுமக்கள் சிகிச்சை பெற்ற மருத்துவமனை மீது அமெரிக்காவின் போர் விமானங்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் உலக நாடுகளை அதிர்ச்சி அடைய வைத்தது.
இது குறித்து ஆப்கானிஸ்தானுக்காக அமெரிக்கா ராணுவ அதிகாரி காம்பெல் கூறுகையில், குண்டூஸ் மருத்துவமனை மீதான தாக்குதல் தவறாக நடந்துவிட்டது. இதுபோன்ற மீண்டும் நிகழாது.
அப்பகுதியில் தாக்குதல் நடத்துமாறு ஆப்கான் ராணுவம் கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்தே தாக்குதல் நடத்தினோம் என்றார்.
அமெரிக்காவின் இத்தாக்குதலுக்கு எல்லைகடந்த மருத்துவர்கள் கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.