இங்கிலாந்தில் அரசியல் அகதியாக தஞ்சம் அடைந்தார் மாலத்தீவு மாஜி அதிபர் நஷீத்
லண்டன்: மாலத்தீவின் முன்னாள் அதிபர் முகமது நஷீத் இங்கிலாந்தில் அரசியல் அகதியாக தஞ்சம் அடைந்துள்ளார்.
2008-ம் ஆண்டு மாலத்தீவு பொதுத் தேர்தல் மூலம் ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அதிபர் முகமது நஷீத். 2012-ம் ஆண்டு தேர்தலில் தோல்வி அடைந்த நஷீத், ஆட்சியை அப்துல்லா யாமீனிடம் பறிகொடுத்தார்.
அப்துல்லா யாமீன் தலைமையிலான அரசு முஹம்மது நஷீத் மீது பல்வேறு வழக்குகளை போட்டது. தனது அதிகாரத்தை பயன்படுத்தி நீதிபதியை கைது செய்ததாக தீவிரவாத தடுப்பு சட்டத்தின்கீழ் தொடரப்பட்ட வழக்கில் நஷீத்துக்கு 13 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இதையடுத்து, அவர் சிறையில் அடைக்கப்பட்டு, தண்டனை அனுபவித்து வந்தார். சிறைவாசத்தின்போது கடும் முதுகுவலியால் சிறையில் அவதிப்பட்ட அவருக்கு தண்டு வடத்தில் ஆபரேசன் நடத்த வேண்டியுள்ளது. அதற்காக இங்கிலாந்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைபெற முடிவு செய்து அரசிடம் அனுமதி கேட்டார்.
அதற்கு மாலத்தீவு அரசு அனுமதி மறுத்து விட்டது. வெளிநாடு செல்லும் நஷீத் மீண்டும் திரும்பி வருவார் என அவரது உறவினர்கள் யாராவது உத்திரவாதம் அளித்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படும் என அரசு அறிவித்து விட்டது. அவரது நிலைமை மேலும் மோசமடைந்ததையடுத்து சிகிச்சைக்காக நஷீத் வெளிநாடு செல்ல அனுமதிக்குமாறு மாலத்தீவு அரசுக்கு அமெரிக்கா, இந்தியா மற்றும் இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் வலியுறுத்தி வந்தனர்.
இதனையடுத்து இங்கிலாந்து நாட்டுக்கு செல்ல அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் சிகிச்சைக்காக இங்கிலாந்து செல்ல மாலத்தீவில் இருந்து முகமது நஷீத் புறப்பட்டுச் சென்றார். அப்போது இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் தலைமையில் அவருக்கு செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஆபரேஷன் முடிந்து உடல்நிலை தேறியதும் மாலத்தீவுக்கு திரும்பிவர முகமது நஷீத் மறுத்து விட்டார். இந்நிலையில், இங்கிலாந்து அரசு நஷீதுக்கு அகதியாக தஞ்சம் அளித்துள்ளதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.