ஜாமீனில் விடுவிக்கப்பட்ட மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்துமா இங்கிலாந்து?
இந்தியாவில் ரூ.9,000 கோடி கடனை வாங்கிவிட்டு அதை திருப்பி செலுத்தாமல் லண்டனில் தலைமறைவாக இருந்த விஜய் மல்லையா லண்டனில் கைது செய்யப்பட்டார். ஆனால் அவருக்கு ஜாமீன் கிடைத்துள்ள நிலையில் இந்தியாவுக்கு நாடு
லண்டன்: இந்திய வங்கிகளில் பல்லாயிரம் கோடி ரூபாய் கடனை வாங்கிவிட்டு அதை திருப்பி செலுத்தாமல் போக்கு காட்டி விட்டு லண்டனில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்த விஜய் மல்லையா கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு ஜாமீன் கிடைத்தது. இந்நிலையில் அவர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
கிங் பிஷர் மதுபான நிறுவனத்தின் உரிமையாளர் விஜய் மல்லையா, இந்திய பொதுத் துறை வங்கிகளில் ரூ.9,000 கோடி கடன் தொகை பெற்றுவிட்டு அதை திருப்பி செலுத்தாமல் லண்டனுக்கு தப்பிச் சென்றார்.
அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த பலமுறை மத்திய அரசு கோரிக்கை விடுத்தும் லண்டன் அரசு பிடி கொடுக்கவில்லை. இந்நிலையில் அவர் அந்நாட்டு நேரப்படி காலை 9.30 மணிக்கு கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீது விசாரணைக்காக வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதைத் தொடர்ந்து கைதான 3 மணி நேரத்திலேயே அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இவரது கைது குறித்து பிரிட்டன் நாட்டு அதிகாரிகள் இந்திய புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தற்போது அவரை நாடு கடத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று பிரிட்டன் அரசு அவரை இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.