இந்தப் பெண் செய்த "பெரிய" தவறு என்னவென்றால்.. "சிரியா" குறித்த புத்தகத்தைப் படித்ததுதான்!
லண்டன்: இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு மிக கசப்பான அனுபவத்தைக் கொடுத்துள்ளது அவரது சமீபத்திய விமான பயணம்
தேனிலவுக்காக சந்தோஷமாக சென்ற அந்தப் பெண்ணை பாதுகாப்புப் படையினர் மறக்க முடியாத வேதனையைக் கொடுத்து விட்டனர். அவர் செய்த குற்றம் - சிரிய நாட்டு இலக்கியம் குறித்த புத்தகத்தை விமானத்தில் படித்ததுதான்.
அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல மேற்கத்திய நாடுகளுக்கு எதைப் பார்த்தாலும் தீவிரவாதப் பயம் வந்து ஒட்டிக் கொள்கிறது. அதில் லேட்டஸ்டாக சிக்கிக் கொண்டவர்தான் இந்தப் பெண் பைசா ஷாஹீன். இங்கிலாந்தைச் சேர்ந்த இவருக்கு சமபத்தில் திருமணம் நடந்தது. தேனிலவுக்காக துருக்கி செல்லத் திட்டமிட்டார் ஷாஹீன்.
இதையடுத்து விமானம் மூலம் அவர் துருக்கிக்குப் பயணமானார். துருக்கி போய் விட்டு தாயகம் திரும்பிய ஷாஹீனுக்கு தெற்கு யார்க்ஷயரில் உள்ள டன்காஸ்டர் விமான நிலையத்தில் அதிர்ச்சி காத்திருந்தது.
அங்கு வைத்து அவரை மடக்கிய இரண்டு பாதுகாப்பு அதிகாரிகள், நீங்கள் விமானத்தில் படித்த புத்தகம் குறித்து எங்களுக்குத் தகவல் வந்துள்ளது. உங்களை தீவிரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரிக்க வேண்டும் என்று கூறி அழைத்துச் சென்றனர். அங்கு அவரிடம் துருவித் துருவி விசாரணை நடத்தப்பட்டது. நீண்ட நேர விசாரணை்குப் பின்னர் அவரை விடுவித்தனர்.
ஷாஹீன் செய்த தவறு, தனது விமான பயணத்தின்போது, 'Syria Speaks: Art and Culture from the Frontline' என்ற நூலைப் படித்ததுதான். சிரிய நாடு தொடர்பான புத்தகத்தைப் படித்ததால் அவர் தீவரவாதியாக இருக்கலாமோ என்ற அச்சமும், சந்தேகமும் பாதுகாப்புப் படையினருக்கு வந்து விட்டது. இதனால்தான் அவரைப் பிடித்து விசாரித்துள்ளனர்.
இதுகுறித்து ஷாஹீன் கூறுகையில், பாதுகாப்பு என்பது அவசியமானதுதான். ஆனால் சந்தேகப்படுவதற்கு ஒரு அளவில்லையா. புத்தகம் படித்தால் கூட தப்பா என்று அவர் வேதனை தெரிவித்துள்ளார்.