மியான்மர் அகதிகளுக்கு ஐநா குழுவினர் உதவி - மலேசியாவிற்கு கடத்தப்பட இருந்தவர்கள் எனத்தகவல்
ரங்கூன்: மியான்மரில் சட்டவிரோதமாக குடியேறியதாக சொல்லப்படுகின்ற அகதிகளை ஐ.நா குழுவினர் பார்வையிட்டு வருகின்றனர். அவர்களுக்கு தேவையான உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
மியான்மரில் கடந்த வியாழக்கிழமை ராகெயன் கடலில் படகில் பயணம் செய்த 200க்கும் மேற்பட்டவர்களை அந்நாட்டு கடற்படையினர் கைது செய்தனர். இவர்கள் அங்குள்ள அகதிகள் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே அகதிகளை ஐநா குழுவினர் பார்வையிட்டு மருத்துவ உதவிகளை அளித்தனர்.
மியான்மர் கடற்படையினரால் மீட்கப்பட்ட அனைவரும் ரோஹிங்கியா இனத்தவர்கள் என்றும், அவர்களை சமூக விரோதிகள் மலேசியா மற்றும் இந்தோனேசியா நாடுகளுக்கு கடத்தி செல்ல இருந்ததாவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மியான்மரில் பங்களாதேஷிலிருந்து வந்து குடியேறிய ரோஹிங்கியா முஸ்லிம் இனமக்களை மியான்மர் பவுத்தர்கள் கொடுமைப்படுத்தி வருவதும், அதனால் அவர்கள் ஏற்கனவே உள்நாட்டிலேயே அகதிகளாகத் தவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.