குஜராத் கலவர வழக்கில் மோடிக்கு 'இம்யூனிட்டி': மனித உரிமைகள் அமைப்புக்கு யு.எஸ். கோர்ட் உத்தரவு
நியூயார்க்: குஜராத் கலவர வழக்கில் பிரதமர் மோடிக்கு அமெரிக்க அரசு இம்யூனிட்டி அதாவது சட்ட நடவடிக்கைளில் இருந்து விலக்கு அளிக்க பரிந்துரைத்துள்ளது பற்றி வரும் நவம்பர் மாதம் 4ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு அமெரிக்க நீதி மையம் என்ற மனித உரிமைகள் அமைப்புக்கு அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்க நீதி மையம் என்ற மனித உரிமைகள் அமைப்பு 2002ம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. மோடி அமெரிக்கா வந்தபோது தான் இந்த வழக்கு தொடரப்பட்டது. ஆனால் மோடிக்கு இம்யூனிட்டி அதாவது சட்ட நடவடிக்கைளில் இருந்து விலக்கு அளிக்க பரிந்துரைத்து மாநில அரசின் சார்பில் அரசு வழக்கறிஞர் ப்ரீத் பராரா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
ஒரு வெளிநாட்டு அரசின் தலைவர் என்ற முறையில் மோடிக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற இந்திய அரசின் கோரிக்கையை அமெரிக்க அரசு நீதித்துறைக்கு கடிதம் மூலம் தெரிவித்தது.
அமெரிக்க அரசின் சட்ட ஆலோசகரான மேரி மெக்லாய்ட் துணை அட்டர்னி ஜெனரல் ஜாய்ஸ் ஆர் பிராண்டாவுக்கு எழுதிய அந்த கடிதத்தில் செப்டம்பர் 30 என தேதியிடப்பட்டுள்ளது. அன்றைய தினம் தான் மோடி அமெரிக்க அதிபர் ஒபாமாவை வெள்ளை மாளிகையில் சந்தித்தார்.
இந்நிலையில் மோடிக்கு இம்யூனிட்டி அளிக்க அமெரிக்க அரசு பரிந்துரை செய்துள்ளது பற்றி வரும் நவம்பர் மாதம் 4ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு அமெரிக்க நீதி மையத்திற்கு நீதிபதி அனலிஸா டாரஸ் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அமெரிக்க நீதி மையத்தின் சட்ட ஆலோசகர் குர்பத்வந்த் சிங் பன்னூன் கூறுகையில்,
மோடி பிரதமர் ஆகும் முன்பு செய்த மனித உரிமை மீறல்களுக்கு தற்போது இம்யூனிட்டி கோர முடியாது என்றார்.