ஃபோர்டு பவுண்டேசனை கண்காணிப்பதா.. அதிர்ச்சியடைந்த அமெரிக்கா இந்தியாவிடம் விளக்கம் கேட்கிறது!
வாஷிங்டன்: ஃபோர்டு பவுண்டேசன் தன்னார்வ அமைப்பின் நிதி நடவடிக்கையை இந்திய அரசு கண்காணிக்க உள்ளதாக அறிவித்துள்ள நிலையில், இதுகுறித்து அமெரிக்கா விளக்கம் கேட்டுள்ளதாக அந்த நாட்டின்
வெளியுறவுத்துறை அதிகாரி பேட்டியளித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை துணை செய்தித் தொடர்பாளர் மேரி கார்ப் இன்று அளித்த பேட்டி: வெளிநாட்டு அமைப்புகளில் இருந்து செல்லும் பணத்தை கண்காணிக்கும் இந்தியாவின் நடவடிக்கையால், சிவில் சொசைட்டி அமைப்புகளுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்கள் அமெரிக்காவுக்கு கவலை தருகிறது.
கிரீன்பீஸ் இந்தியா அமைப்பின் பதிவை இந்தியா சஸ்பெண்ட் செய்துள்ளதையும், ஃபோர்டு பவுண்டேசன் அமைப்பின் நிதி நடவடிக்கைகளை இந்தியா கண்காணிப்பதையும் அமெரிக்கா அறிந்துள்ளது. இதுகுறித்து உரிய இடத்தில், அமெரிக்கா விளக்கம் கேட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
ஃபோர்டு பவுண்டேசன் அமைப்பின் நிதி நடவடிக்கைகள் சந்தேகத்திற்கிடமாக உள்ளதாகவும், நாட்டின் பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த அமைப்பு கண்காணிப்பின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், இந்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. ஃபோர்டு பவுண்டேசனுக்கு வரும் நிதி பரிமாற்றத்தை கண்காணிக்குமாறு, ரிசர்வ் வங்கியிடமும், உள்துறை அமைச்சகம் கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கிரீன்பீஸ் அமைப்பின் பதிவை ரத்து செய்த நிலையில், திடீரென, அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்தியாவின் மதசார்பின்மை குறித்து கேள்வி எழுப்பினார். தற்போது வடகிழக்கு இந்திய மாநிலங்களில் ஃபோர்டு பவுண்டேசன் துணையுடன் மதமாற்றம் நிகழ்ந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்திருந்த நிலையில், மீண்டும் அமெரிக்கா இந்த விவகாரத்தில் தலையிடுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தான், பனை மரத்தில் தேள் கொட்டினால் தென்னை மரத்தில் நெறிகட்டுவது என்பார்கள் போலும்.