அமெரிக்கா: செயின்ட் லூயிஸில் அப்துல் கலாமின் இலட்சியகனவு விதைப்பு கூட்டம்!
செயின்ட் லூயிஸ் (மிசௌரி): அமெரிக்காவின் மிசௌரி மாநிலத்தில் உள்ள செயின்ட் லூயிஸ் நகரில் டாக்டர் அப்துல்கலாமின் இலட்சியகனவு விதைப்பு கூட்டம் நடந்தது.
பாரத ரத்னா டாக்டர் அப்துல்கலாம் அவர்களின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வண்ணம் மிசெளரி மாநிலம் செயின்ட் லூயிஸ் மாநகரில் கடந்த வெள்ளிகிழமை (ஜூலை 31, 2015) இரவு இந்தியர்கள் ஒன்று கூடி "அப்துல்கலாமின் இலட்சிய கனவு விதைப்புக் கூட்டத்துக்கு" ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்தக் கூட்டத்தில் மாமேதை கலாம் அவர்களுக்கு புகழாஞ்சலி செலுத்தப்பட்டது. பெற்றோர்களும், குழந்தைகளும் கண்ணீர் மல்க கூட்டத்தில் அமர்ந்திருந்தனர். ஒரு நிமிடம் மௌன அஞ்சலி நிகழ்த்தப்பட்டது. ஒவ்வொருவரும் டாக்டர் கலாம் அவர்களுடன் தாங்கள் சந்தித்த மகிழ்ச்சியான தருணங்களை, அவருடைய எளிமையான வாழ்க்கையைப் பகிர்ந்து கொண்டனர்.
கூட்டத்தில் டாக்டர் கலாமின், மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான 10 கட்டளைகளை உறுதிமொழியாக எடுத்து கொண்டனர். மெழுகுவர்த்தி ஏற்றி அனைவரும் அஞ்சலி செலுத்தினர். ஒவ்வொருவரும் தங்கள் வருகையை டாக்டர் கலாம் அவர்களின் அஞ்சலி சுவற்றில் பதிவிட்டு கண்ணீர் மல்க கலைந்து சென்றனர்.
இக்கூட்டத்தை செயின்ட் லூயிஸ் மாநகர இந்தியர்கள்கூட்டமைப்பின் தலைவர் சரத் ராவ் ஏற்பாடுசெய்திருந்தார். தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள சங்கங்கள் இணைந்து நடத்தினர்.