மத நிந்தனை வழக்கு: நடிகை வீணா மாலிக், கணவருக்கு 26 ஆண்டுகள் சிறை- பாக். கோர்ட் அதிரடி
இஸ்லாமாபாத்: மதத்தை நிந்தித்ததாகக் கூறி நடிகை வீணா மாலிக், அவரது கணவர் பஷீர், ஜியோ டிவி உரிமையாளர் மிர் ஷகீலுர் ஹர்மான் உள்ளிட்ட 4 பேருக்கு பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் 26 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.
பாகிஸ்தானைச் சேர்ந்த நடிகை வீணா மாலிக் மற்றும் அவரது கணவர் பஷீர் கடந்த மே மாதம் ஜியோ டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியில் மதம் சார்ந்த பாடலை போட்டு மாலிக், பஷீர் போலியாக திருமணம் செய்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி மதத்தை நிந்திப்பதாக உள்ளதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் வீணா மாலிக், அவரது கணவர் பஷீர், பாகிஸ்தானின் மிகப்பெரிய மீடியா குழுமமான ஜியோ மற்றும் ஜாங் குழுமத்தின் தலைவர் மிர் ஷகீலுர் ரஹ்மான், நிகழ்ச்சி தொகுப்பாளர் ஷைஸ்தா வாஹிதி ஆகியோருக்கு 26 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. மேலும் அவர்கள் 1.3 மில்லியின் பாகிஸ்தான் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அவர்கள் அபராதத்தை செலுத்த தவறினால் அவர்களின் சொத்துக்களை விற்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தண்டனையை எதிர்த்து அவர்கள் கில்கிட்- பால்திஸ்தானில் உள்ள உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யலாம். தண்டனை விதிக்கப்பட்ட நான்கு பேரும் பாகிஸ்தானில் வசிக்கவில்லை. ரஹ்மான் அமீரகத்தில் வசித்து வருகிறார். தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதால் மீதமுள்ள மூவரும் வெளிநாடுகளில் வசித்து வருகிறார்கள்.
மதத்தை நிந்தித்ததாக குற்றச்சாட்டு எழுந்தபோதே வாஹிதி மற்றும் ஜியோ குழுமம் மன்னிப்பு கேட்டார்கள். ஆனால் அவர்களின் மன்னிப்பு ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அவர்கள் மீது கராச்சி மற்றும் இஸ்லாமாபாத்திலும் மத நிந்தனை வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.