வெனிசுலாவில் ஏராளமான பள்ளிச் சிறுமிகள் தாயாகும் அவலம்
காரகாஸ்: வெனிசுலாவில் பள்ளி சிறுமிகள் கர்ப்பமாவது அதிகரித்துக் கொண்டே போவதால் அது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஷாப்பிங் மாலில் சீருடை அணிந்து கர்ப்பமாக உள்ள பள்ளிச் சிறுமிகளின் பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன.
தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் பள்ளிச் சிறுமிகள் தாயாவது அதிகரித்து வருகிறது. தென் அமெரிக்காவிலேயே வெனிசுலாவில் தான் பள்ளிச் சிறுமிகள் தாயாவது அதிகமாக உள்ளது. சிறுமிகள் கர்ப்பமடைவது, பிரசவத்தின்போது இறப்பது குறித்து ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது.
இதையடுத்து 2 தொண்டு நிறுவனங்கள் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த தலைநகர் காரகாஸில் உள்ள பிரபல மாலில் சீருடை அணிந்து கர்ப்பமாக உள்ள பள்ளிச் சிறுமிகளின் பொம்மைகளை வைத்துள்ளது. அதை பார்த்தாவது பலருக்கு புத்தி வரட்டும் என்று அவர்கள் வைத்துள்ளனர். 15 வயதுக்குட்பட்ட சிறுமிகள் அணியும் சீருடையை அந்த பொம்மைகளுக்கு அணிவித்துள்ளனர்.
வெனிசுலாவில் பிறக்கும் குழந்தைகளில் 23 சதவீதம் 18 வயதுக்குட்ப்பட்ட சிறுமிகளுக்கு பிறக்கின்றன. வெனிசுலா தெருக்களில் 18 வயதுக்குட்பட்ட கர்ப்பிணிகளை பார்ப்பது சகஜமான ஒன்றாகிவிட்டது.
இந்நிலையில் கல்வி மற்றும் குழந்தைகள் உரிமை மேம்பட்டடுள்ளதாக வெனிசுலா அரசு தெரிவித்துள்ளது. ஆனால் செக்ஸ் கல்வி மேம்படுத்தப்பட வேண்டும் என்றும், இது குறித்து பெற்றோர் தான் தீவிரம் காட்ட வேண்டும் என்றும் தொண்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
மாலில் வைக்கப்பட்டுள்ள கர்ப்பிணி பொம்மைகள் பிற மால்களிலும் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட உள்ளது. இந்த பொம்மைகள் ஒரு மாத காலம் பல்வேறு மால்களில் வைக்கப்பட உள்ளன.
வெனிசுலாவில் குழந்தை பெற்றுக் கொள்ளும் ஒவ்வொரு 1000 பெண்களில் 101 பேர் 15 முதல் 19 வயது வரை உள்ளவர்கள். இந்த எண்ணிக்கை தான் லத்தீன் அமெரிக்காவில் அதிகம் என்று ஐ.நா. அண்மையில் தெரிவித்துள்ளது.