செமி ஆட்டோமேட்டிக் துப்பாக்கி விற்பனையை நிறுத்துகிறது வால்மார்ட்
வாஷிங்டன்: அமெரி்க்காவின் பிரபல வால்மார்ட் நிறுவனம் தனது விற்பனையகங்களில் செமி ஆட்டோமேட்டிக் துப்பாக்கி விற்பனையை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
ஏஆர் 15 உள்ளிட்ட செமி ஆட்டோமேட்டிக் துப்பாக்கிகளை இனிமேல் வால்மார்ட் விற்காதாம். அமெரிக்காவில் பெருகி வரும் துப்பாக்கிச் சூட்டுப் பின்னணியில் இந்த முடிவை எடுத்துள்ளது வால்மார்ட்.
அதேசமயம், இந்த வகைத் துப்பாக்கிகளுக்கு கிராக்கி குறைந்து விட்டதால்தான் இந்த முடிவை வால்மார்ட் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அதை வால்மார்ட் மறுத்துள்ளது.
விற்க மாட்டோம்...
இதுகுறித்து வால்மார்ட் செய்தித் தொடர்பாளர் கோரி லுன்ட்பர்க் கூறுகையில், ‘வாடிக்கையாளர்கள் இதை வாங்குகிறார்களோ இல்லையோ அது பிரச்சினை இல்லை. நாங்கள் விற்பதில்லை என்ற முடிவை எடுத்துள்ளோம்' என்றார்.
3ல் ஒரு பங்குக்கும் குறைவு...
அமெரிக்காவில் உள்ள 4500 வால்மார்ட் கடைகளில் இந்த வகை துப்பாக்கிகள் தற்போது 3ல் ஒரு பங்குக்கும் குறைவான அளவிலேயே விற்பனையாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
எடை குறைவானது...
ஏஆர் 15 ரக துப்பாக்கிகள் மிகவும் அபாயகரமானவை, புகழ் பெற்றதும் கூட. எடைக் குறைவானது. நம்பகமானது, அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது.
ராணுவத்தினருக்காக...
இதை முதலில் அமெரிக்க ராணுவத்தினருக்காகவே தயாரித்தனர். ஆனால் இன்று அமெரிக்கர்கள் பலரி்டமும் இது புழங்கி வருகிறது.
துப்பாக்கிச் சூடு...
சமீபத்தில் கனக்டிகட் மாகாணத்தில் ஒரு தொடக்கப் பள்ளியில் துப்பாக்கி் சூடு நடந்தது. அதேபோல கொலராடோவில் ஒரு துப்பாக்கிச் சூடு நடந்தது. முதல் சம்பவத்தில் 26 பேரும், 2வது சம்பவத்தில் 12 பேரும் உயிரழந்தனர்.
சர்ச்சைகள்...
இந்த செமி ஆட்டோமேட்டிக் ரக துப்பாக்கிகள் குறித்து பெரும் சர்ச்சையும், விவாதங்களும் எழுப்பியது. இதுபோன்ற துப்பாக்கிகள் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
சுலபமாக வாங்க முடிந்தது...
மேலும் கொலையாளர்கள் இதை சர்வ சாதாரணாக வாங்க முடிவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் இந்த சம்பவங்களுக்கும் தங்களது முடிவுக்கும் தொடர்பில்லை என்று வால்மார்ட் கூறியுள்ளது.