தீவிரவாதத்தை ஒழிப்பது தான் இந்தியா, அமெரிக்காவின் முக்கிய நோக்கம்: பிரதமர் மோடி
வாஷிங்டன்: தீவிரவாதத்தை அழித்து அமைதியை நிலைநாட்டச் செய்வதுதான் இந்தியா மற்றும் அமெரிக்காவின் முக்கிய நோக்கம் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
பிரதமர் மோடி, அமெரிக்க அதிபரின் அதிகாரபூர்வ மாளிகையான வாஷிங்டன் வெள்ளை மாளிகைக்கு இன்று சென்றுள்ளார். அங்கு அவரை அதிபர் டிரம்ப் வரவேற்றார். பின்னர் இருநாட்டு தலைவர்களும் வெள்ளை மாளிகையில் ஆலோசனை நடத்தினர்.
இதன் பின்னர் வெள்ளை மாளிகையில் டிரம்ப், மோடி கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பிரதமர் மோடி பேசுகையில், ஆப்கானிஸ்தானில் அமைதி நிலவுவதையே இந்திய விரும்புகிறது. தீவிரவாதத்தை ஒழிப்பது தான் இந்தியா, அமெரிக்காவின் முக்கிய நோக்கம். சர்வதேச அளவில் தீவிரவாதத்தை எதிர்கொள்ள இருநாடுகளும் இணைய வேண்டும். தீவிரவாதத்தை ஒழிப்பது தான் நமது இலக்கு என்று கூறினார்.
டிரம்ப் பேசுகையில், அமெரிக்கா, இந்தியா இடையேயான வளர்ச்சி முன் எப்போதும் இல்லாத வகையில் சிறப்பாக உள்ளது. அமெரிக்காவும் இந்தியாவும் நட்புடன் இணைந்து செயல்படுவோம்.
மிக வேகமாக பொருளாதார வளர்ச்சி அடையும் நாடு இந்தியா. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த பிரதமர் மோடி முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
தீவிரவாதத்தை இந்தியா, அமெரிக்கா இணைந்து முறியடிக்கும். அமெரிக்க தயாரிப்புகளை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கான தடைகளை நீக்க வேண்டும். அமெரிக்காவிடம் இருந்து அதிக அளவு எரிசக்திகளை இந்தியா வாங்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.