இரண்டு நாட்கள் வாட்ஸ்அப்புக்கு தடைவிதித்தது பிரேசில் நீதிமன்றம்
ரியோ டி ஜெனீரோ: பிரேசில் நாட்டில் வாட்ஸ்அப்புக்கு இரண்டு நாட்கள் தடைவிதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இன்றைய நவநாகரீக உலகில் செல்போன் பயன்படுத்த தெரிந்தவர்களில் வாட்ஸ்அப் அப்ளிகேஷன்சை பயன்படுத்தாதவர்களே இல்லை எனலாம் அந்த அளவுக்கு அதன் பயன்பாடு அனைவரிடமும் பிரபலம் அடைந்துள்ளது.
செல்போன் சேவையின் ஜாம்பவனாக திகழும் வாட்ஸ்அப்பின் பயன்பாட்டை 48 மணிநேரத்துக்கு பயன்படுத்த பிரேசில் நாடு தடைவிதித்துள்ளது. பிரேசில் நாட்டின் இணைய பயனாளர்களில் 93 சதவீதம் பேர் வாட்ஸ் அப்பில் கணக்கு வைத்துள்ளதாகப் புள்ளி விபரம் தெரிவிக்கின்றது. குறிப்பாக இளைஞ தலைமுறையினர் அதிக அளவில் வாட்ஸ்அப் மூலமே பல்வேறு தகவல்களை பரிமாறி வருகின்றனர்.
இந்நிலையில், பிரேசிலில் நடைபெற்று வந்த குற்றவியல் வழக்கு ஒன்றில், நீதிமன்றத்தின் உத்தரவுக்கு கலிபோர்னியாவை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனமான வாட்ஸ் அப் ஒத்துழைக்க மறுத்தது. இதையடுத்து அதன் சேவையை 48 மணி நேரம் நிறுத்தி வைக்குமாறு, பிரேசில் மாநில நீதிபதி ஒருவர் உத்தரவிட்டுள்ளார்.
உலகின் மற்ற பகுதிகளிலிருந்து பிரேசில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதைக் காண்பது கவலையளிக்கிறது என்று வாட்ஸ் அப் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஜான் கோம் தெரிவித்துள்ளார். அதே நேரம், வாட்ஸ் அப் மீதான தடை அமலுக்கு வந்த சில மணிகளுக்குள் அதன் போட்டி சேவை நிறுவனம் ஒன்று 10 இலட்சத்துக்கும் அதிகமான புதிய பயன்பாட்டாளர்களை கையாள்வதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.