மனித உயிர்களை அழிக்கத் தயங்காத பின்லேடன்.. அரண்டு போய் மருண்ட அந்த நிமிடம்!
வாஷிங்டன்: உலகின் அதி பயங்கர தீவிரவாதியாக அறியப்பட்ட, நூற்றுக்கணக்கான உயிர்களைப் பறித்தபோதும் கூட சற்றும் கலங்காமல் புன்னகைத்த ஒசாமா பின்லேடன், தன் எதிரே வந்து காலன் நின்ற அந்த தருணத்தில், அப்படியே பயந்து போய் ஷாக் ஆகி சமைந்து போய் விட்டாராம்.
பயமே அறியாதவர்களையும் கூட நடுங்க வைப்பது மரணம் மட்டுமே. மரணம் வருகிறது என்று சொன்னால் எப்படிப்பட்ட தைரியசாலியும் சற்று கலங்கித்தான் போவான். உனது உயிர் போகப் போகிறது என்று யாரிடமாவது கூறினால் நிச்சயம் கலங்கித்தான் போவார்கள். அதிலிருந்து பின்லேடனும் கூட விதிவிலக்கில்லை.
அத்தனை உயிர்களைத் துச்சமாக மதித்து, கொடூரமாக பறித்து வந்த பின்லேடனைத் தேடி அந்த மரணம் வந்தபோது அவரும் கூட பயந்து போய் விட்டாராம்.
பின்லேடனின் கடைசி நிமிடங்கள் குறித்து, அவரைக் கொன்று வீழ்த்திய அமெரிக்க கடற்படை சீல் வீரர்கள் தெரிவித்துள்ள கருத்துக்களும், அமெரிக்காவிலிருந்து வெளியாகியுள்ள பல்வேறு தகவல்களும் விளக்குவதாக அமைந்துள்ளன.
ராபர்ட் ஓ நீல்
பின்லேடனை சுட்டு வீழ்த்திக் கதையை முடித்த வீரர் ராபர்ட் ஓ நீல். இவர் அபோதாபாத்தில் உள்ள பின்லேடன் வீ்ட்டுக்குள் அதிரடியாக புகுந்த அமெரிக்க சீல் பிரிவு கமாண்டோக்கள் குழுவில் இடம் பெற்றிருந்தவர். இவர்தான் பின்லேடனை தலையில் 3 முறை சுட்டுக் கொன்றவர். இவர் பின்லேடனின் கடைசி நிமிடங்கள் குறித்து விவரித்துள்ளார்.
பயந்து நடுங்கிய பின்லேடன்
இதுகுறித்து நீல் கூறுகையில் கடைசி நேரத்தில் பின்லேடன் பயந்து போய்க் காணப்பட்டார். பயந்த நிலையிலேயே அவர் மரணத்தையும் தழுவினார். நான் அவரைக் கொல்லப் போகிறேன் என்று தெரிந்ததுமே அவர் பயப்பட ஆரம்பித்து விட்டார். அத்தோடு அவரது கதையும் முடிந்தது என்று கூறியுள்ளார் நீல்.
மனைவிக்குப் பின் மறைந்தார்
நான் பின்லேடன் இருக்கும் அறைக்குள் புகுந்தபோது அங்கிருந்த அவர் என்னைப் பார்த்து அதிர்ந்து விட்டார். அந்த அறையில் பின்லேடனின் இளைய மனைவியும் இருந்தார். தனது மனைவிக்குப் பின்னே போய் பதுங்கிய பின்லேடன், நான் அவரைத் தாக்குவதிலிருந்து தப்பிக்க முயன்றார். மேலும் தனது துப்பாக்கியையும் எடுக்க முயன்றார்.
பாய்ந்த குண்டுகள்
ஆனால் அதற்கு நான் அவகாசம் தரவில்லை. எனது துப்பாக்கியிலிருந்து பாய்ந்த 3 குண்டுகள் அவரது நெற்றி மற்றும் தலையைத் துளைத்துக் கொண்டு போயின.
யார் சுட்டது என்பது முக்கியமல்ல
பின்லேடனை சுட்டது நான்தான் என்று வேறு சிலரும் கூறுகிறார்கள். இப்போது அது முக்கியமில்லை. சீல் படை பின்லேடனைப் பிடித்தது. அவனது கதையை முடித்தது. நான் பின்லேடனை சுடவில்லை என்று சிலர் கூறலாம். அதுகுறித்து நான் கவலைப்படவில்லை. அதனால் என்ன பரவாயில்லை. நாங்கள் பின்லேடன் கதையை முடித்து விட்டோம் அவ்வளவுதான் என்றும் கூறியுள்ளார் நீல்.
மாட் சொல்வது என்ன?
சீல் படையில் இடம் பெற்றிருந்த இன்னொரு வீரரான மாட் பிஸ்ஸனட் என்பவரும் பின்லேடனின் கடைசி நிமிடங்கள் குறித்து புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். மார்க் ஓவன் என்ற பெயரில் அதை எழுதியுள்ளார். அதில், கடந்த 15 ஆண்டுகளில் சீல் படை சந்தித்திராத மிகப் பெரிய சவால் பின்லே்டனை வீழ்த்தியதுதான். நிறைய பாடுபட்டோம், நிறைய திட்டமிட்டோம், நிறைய உழைத்தோம். பலன் நாங்கள் எதிர்பார்த்தபடி கிடைத்தது.
குழுவுக்குக் கிடைத்த வெற்றி
இதில் பின்லேடனை யார்சுட்டது என்ற கேள்விக்கே இடமில்லை. நாங்கள் குழுவாக செயல்பட்டோம், எங்களது குழு பின்லேடனை வீழ்த்தியது. நாங்கள் யாருமே பயப்படவில்லை, பின்லேடனைத் தவிர என்று அவர் கூறியுள்ளார்.