சிங்கள ராணுவத்தின் பிடியில் மகனுடன் புலிகளின் மூத்த தலைவர் பாலகுமாரன் - புதிய படம் வெளியானது!
லண்டன்: சிங்கள ராணுவத்தின் பிடியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தலைவர்களில் ஒருவரான க.வே.பாலகுமாரன் மற்றும் அவரது மகன் ஆகியோர் இருக்கும் படத்தை பி.பி.சி.யின் முன்னாள் செய்தியாளர் பிரான்சிஸ் ஹரிசன் இன்று வெளியிட்டுள்ளார். அதேபோல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட பத்திரிகையாளர் இசைப்பிரியாவுடன் கொலை செய்யப்பட்ட உஷாலினியின் படங்களையும் ஹரிசன் வெளியிட்டுள்ளது உலகத் தமிழர்களிடத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2009ஆம் ஆண்டு மே 18-ந் தேதி முள்ளிவாய்க்காலில் தமிழீழ தமிழர்கள் ஒன்றரை லட்சம் பேர் படுகொலை செய்யப்பட்டனர். அப்போது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தலைவர்கள், தளபதிகள் மற்றும் பொதுமக்கள் என பல்லாயிரக்கணக்கானோர் சிங்கள ராணுவத்திடம் சரணடைந்தனர்.
Where is Balakumaran and his son seen here in #srilanka military custody & disappeared since? #srilanka 18 May 2009 pic.twitter.com/kQTrxwgSGP
— Frances Harrison (@francesharris0n) May 17, 2015
இவர்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் 2-ம் நிலை தலைவர்களான பேபி சுப்பிரமணியன், க.வே.பாலகுமாரன், புதுவை ரத்தினதுரை உள்ளிட்டோரும் அடக்கம். இன்னமும் இவர்களது நிலைமை என்னவென்று தெரியவில்லை. இவர்களைப் பற்றி எந்த ஒரு தகவலையும் சிங்கள அரசு வெளியிடாமல் மவுனமாகவே இருந்து வருகிறது.
இந்நிலையில் பி.பி.சி.யின் முன்னாள் செய்தியாளரும் இலங்கைப் போர் குறித்த முக்கிய ஆவணங்களை வெளியிட்டவருமான பிரான்சிஸ் ஹரிசன் தமது ட்விட்டர் பக்கத்தில் க.வே. பாலகுமாரன், அவரது மகன் ஆகியோர் சிங்கள ராணுவத்தின் பிடியில் அவமானப்படுத்தப்பட்ட நிலையில் அமர வைக்கப்பட்டு இருக்கும் புதிய படங்களை வெளியிட்டுள்ளார்.
Not only TV presenter Isaipriya killed in #srilanka custody but also Ushalini seen here with her alive & dead. #lka pic.twitter.com/YMlte8lppb
— Frances Harrison (@francesharris0n) May 17, 2015
அத்துடன் எங்கே பாலகுமாரனும் அவரது மகனும் என்ற தலைப்பில் கேள்வியும் எழுப்பியுள்ளார். மேலும் தமிழீழ தேசிய தொலைக்காட்சியின் செய்தியாளரான இசைப்பிரியாவைப் போலவே சிங்கள ராணுவத்தால் உயிரோடு கைது செய்யப்பட்டு சீரழிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட உஷாலினியின் புகைப்படங்களையும் பிரான்சிஸ் ஹரிசன் இன்று வெளியிட்டுள்ளார்.
பிரான்சிஸ் ஹரிசனின் இந்த புதிய படங்கள் உலகத் தமிழர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.