‘ஆப்கான் தலீபான்கள் தீவிரவாதிகள் அல்ல... ஆயுதம் ஏந்திய போராளிகள்’: அமெரிக்கா அந்தர் பல்டி
வாஷிங்டன்: ஆப்கன் தாலீபன்கள் தீவிரவாதிகள் அல்ல என வெள்ளை மாளிகையின் ஊடக துணைச் செயலாளர் அளித்துள்ள பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து தீவிரவாதத்திற்கு எதிராக போராடி அமெரிக்க அரசு. ஆப்கானிஸ்தானில் தாலிபன் தீவிரவாதிகளை ஒழிக்க தனது படையை கடந்த சில ஆண்டுகளாக நிறுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் ஒபாமாவும் தனது சுற்றுப் பயணங்களில் தீவிரவாதத்திற்கு எதிராகக் குரல் கொடுத்து வருகிறார்.
இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதியின் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் ஊடக துணைச்செயலாளர் எரிக் சூல்ட்ஸ், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர், "(ஆப்கன்) தாலீபன்கள் ஆயுதம் ஏந்திய போராளிகள். ஆனால் ஐ.எஸ். இயக்கத்தினர், தீவிரவாதிகள். எனவே நாங்கள் தீவிரவாத கும்பல்களுக்கு சலுகைகள் வழங்க மாட்டோம்" என்றார்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த செய்தியாளர்கள், "என்ன, தாலிபன்கள் தீவிரவாதிகள் இல்லையா?" என கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர், "நான் தாலிபன்களை அப்படி கருதவில்லை. தாலிபன்கள், ஆயுதம் ஏந்திய போராளிகள்" என தான் கூறியதை உறுதிப்படுத்தினார்.
ஆனால் அதே அமெரிக்கா, ஆப்கான் தலீபான்களின் தலைவர் முல்லா உமர் தலைக்கு 10 மில்லியன் டாலர் (சுமார் ரூ.61 கோடி) விலை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. முல்லா உமரை உயிரோடு பிடிக்க சரியான தகவல் தருவோருக்கு இந்த தொகையை அமெரிக்கா பரிசாக வழங்கும்.