யார் இந்த பாகிஸ்தான் தாலிபான்கள்?: அவர்களுக்கு என்ன வேண்டும்?
இஸ்லாமாபாத்: பெஷாவர் நகரில் உள்ள பள்ளியில் வெறியாட்டம் நடத்தி 141 பேரை கொன்ற தெஹ்ரீக் இ தாலிபான்களை அடக்க பாகிஸ்தான் அரசால் முடியவில்லை.
வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் நகரில் இருக்கும் ராணுவ பள்ளியை அந்நாட்டைச் சேர்ந்த தெஹ்ரீக் இ தாலிபான் தீவிரவாதிகள் தாக்கியதில் 132 குழந்தைகள் உள்பட 141 பேர் பலியாகினர்.
இந்நிலையில் இந்த தெஹ்ரீக் இ தாலிபான்கள் யார் என்று பார்ப்போம்.
தெஹ்ரீக் இ தாலிபான்
ஆப்கானிஸ்தான் எல்லையோரம் உள்ள பழங்குடியின பகுதியான வடக்கு வசிரிஸ்தானைச் சேர்ந்த போராளிகள் தான் தெஹ்ரீக் இ தாலிபான் அமைப்பினர். ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா போர் தொடுக்க பாகிஸ்தான் ஆதரவு அளித்ததில் இருந்து ராணுவத்தை எதிர்த்து போராடி வருகிறார்கள். சிறு சிறு குழுக்களாக இருந்த போராளிகள் 2007ம் ஆண்டு தான் தெஹ்ரீக் இ தாலிபான் என்ற அமைப்பாக ஒன்றிணைந்தனர்.
முல்லா
தெஹ்ரீக் இ தாலிபான் அமைப்பின் தலைவராக முல்லா பஸ்லுல்லா என்பவர் உள்ளார். 2012ம் ஆண்டு சிறுமி மலாலா யூசப்சாயை தாக்கியதற்கு பொற்றுப்பேற்றவர் அவர் தான்.
குறிக்கோள்
பாகிஸ்தானில் ஆட்சி செய்யும் அரசை வீழ்த்திவிட்டு கடுமையான இஸ்லாமிய சட்டங்களை நடைமுறைப்படுத்துவது தான் தெஹ்ரீக் இ தாலிபானின் குறிக்கோள். அவர்களுக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபான்களுடன் தொடர்பு உள்ளது. தெஹ்ரீக் இ தாலிபான் அமைப்பினர் அடிக்கடி பாகிஸ்தான் ராணுவம், அரசு அதிகாரிகள், பொது மக்களை தாக்கி வருகின்றனர். இது வரை அவர்கள் ஆயிரக்கணக்கானோரை கொலை செய்துள்ளனர்.
பாகிஸ்தான் அரசு
தெஹ்ரீக் இ தாலிபான் அமைப்பினர் வசிக்கும் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் பலமுறை தாக்குதல் நடத்தி இதுவரை 4 ஆயிரத்தற்கும் மேற்பட்ட தீவிரவாதிகளை கொன்றுள்ளது. மேலும் இந்த தாக்குதல்களில் ஆயிரக்கணக்கான தீவிரவாதிகள் காயம் அடைந்துள்ளனர். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தாலிபான்களுடன் பேசி அமைதியை நிலைநாட்டுவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த பிரதரமர் நவாஸ் ஷெரீபால் அவர்களை எதுவும் செய்ய முடியவில்லை. கராச்சி விமான நிலையம் தாக்கப்பட்ட பிறகு தாலிபான்கள் வசிக்கும் வசிரிஸ்தானில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி ஆயிரத்திற்கும் மேற்பட்ட தீவிரவாதிகளை கொன்றது.