யார்டா படவா என் பெட்டுல?: மப்பில் மட்டையான குடிமகனுடன் செல்ஃபி எடுத்த துபாய் பெண்
துபாய்: துபாயில் குடியிருப்புக் கட்டிடத்தின் பாதுகாவலரின் நண்பர் ஒருவர் குடிபோதையில் ஒரு வீட்டுக்குள் புகுந்து படுக்கையில் படுத்து தூங்கி போலீசில் சிக்கியுள்ளார்.
துபாயில் உள்ள குடியிருப்புக் கட்டிடம் ஒன்றில் வசித்து வருபவர் ரிம் பி. அவர் இரவு நேரத்தில் வெளியே சென்றுவிட்டு காலை வீட்டுக்கு வந்தார். படுக்கையறைக்கு சென்றவர் அதிர்ச்சி அடைந்தார். காரணம் அவரது படுக்கையில் யாரோ ஒருவர் தூங்கிக் கொண்டிருந்தார். இதையடுத்து அந்த பெண் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
போலீசார் வந்தவுடன் அந்த பெண் படுக்கையில் அசந்து தூங்கிய குடிமகனுடன் செல்ஃபி எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.
இது குறித்து அவர் இன்ஸ்டாகிராமில் கூறியிருப்பதாவது,
வீட்டுக்கு வந்தால் என் பெட்டில் யாரோ குடிகாரன் படுத்திருக்கிறார். திருட முயன்று தூங்கிவிட்டார். சிறந்த கொள்ளை முயற்சி என்று தெரிவித்துள்ளார்.
விசாரணையில் அந்த நபர் குடியிருப்புக் கட்டிடத்தில் வேலை செய்யும் பாதுகாவலரின் நண்பர் என்பதும், குடித்துவிட்டு படுக்க இடம் தேடியபோது ரிம்மின் வீட்டுக் கதவு பூட்டாமல் இருந்ததால் உள்ளே நுழைந்து படுக்கையில் தூங்கியதும் தெரிய வந்துள்ளது.
அவர் வீட்டில் எதையும் திருடாவிட்டாலும் அத்துமீறி நுழைந்ததற்காக அவரை போலீசார் கைது செய்தனர்.