பெரும்பணக்கார ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் அடுத்த தலைவர் யார்?
பாக்தாத்: உலகிலேயே பணக்கார தீவிரவாத அமைப்பான ஐ.எஸ். அமைப்பின் அடுத்த தலைவர் யாராக இருக்கலாம் என்ற பேச்சு கிளம்பியுள்ளது.
உலகின் பணக்கார தீவிரவாத அமைப்பு ஈராக்கில் அட்டகாசம் செய்யும் ஐ.எஸ். அமைப்பு. இந்த அமைப்பின் தலைவரான அபுபக்கர் அல் பாக்தாதி கடந்த வெள்ளிக்கிழமை இரவு மொசுல் நகரில் ஈராக் படைகள் நடத்திய தாக்குதலில் படுகாயம் அடைந்ததாக கூறப்படுகிறது. மேலும் சனிக்கிழமை அல் கைம் நகரில் அமெரிக்க கூட்டுப்படையினர் நடத்திய தாக்குதலில் பாக்தாதி படுகாயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் பாக்தாதி இறந்துவிட்டாரா இல்லையா என்பது உறுதியாகத் தெரியவில்லை. இதற்கிடையே பாக்தாதி இறந்துவிட்டதாகவும் அவரது ஆதரவாளர்கள் அவரின் உடலை அடக்கம் செய்துவிட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த சூழலில் ஐ.எஸ். அமைப்பின் அடுத்த தலைவர் யார் என்பது பற்றி பேச்சு கிளம்பியுள்ளது.
பாக்தாதி இறந்திருந்தால் அவருக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவரான அபு அய்மான் அல் ஈராக்கி தான் அடுத்த தலைவர். அய்மான் வான்வெளி தாக்குதலில் கொல்லப்பட்டிருந்தால் அபு அல் அன்பாரி அல்லது அபு முஸ்லிம் அல் துர்க்மணி தான் அடுத்த தலைவர் என்று கூறப்படுகிறது. இதில் துர்க்மணி இறந்துவிட்டதாக ஈராக் பாதுகாப்பு துறை அமைச்சர் காலித் அல் ஒபைதி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ஐ.எஸ். அமைப்பின் தலைவராக ஒருவருக்கு போர்புரியும் திறமை மட்டும் இருந்தால் போதாது இஸ்லாம் பற்றியும், அதன் சட்டங்கள் பற்றியும் நன்கு தெரிந்திருக்க வேண்டும். அடுத்த தலைவரை ஷுரா கவுன்சில் தான் தேர்வு செய்யும். முன்னதாக தன்னை தானே கலிபா என்று பாக்தாதி அறிவித்துக் கொண்டார். அறிஞர்கள் அடங்கிய ஷுரா கவுன்சில் தான் பாக்தாதி கலிபாவாக அறிவிக்கப்பட ஒப்புதல் வழங்கியது.