கணவர் சடலத்துடன் ஒராண்டு குடும்பம் நடத்திய பெல்ஜியம் பாட்டி
புரூசெல்ஸ்: விவாகரத்துக்கள் மிகுந்து வரும் காலகட்டத்தில் மரணமடைந்த பிறகும் கூட தனது கணவரைப் பிரிய மனமில்லாத பெல்ஜியம் பெண் ஒருவர், அவரது உயிரற்ற உடலுடன் கிட்டத்தட்ட ஓராண்டு காலம் வாழ்ந்து வந்துள்ளார்.
இன்றைய வாழ்க்கையோட்டத்தில் கருத்து வேறுபாடு காரணமாக தம்பதிகள் பிரிந்து வாழ்வது அதிகரித்து வருகிறது. இதற்குக் காரணம் தம்பதிகளுக்கிடையே சரியான புரிதல் இல்லாமல் போவது தான்.
ஆனால், திருமணமாகி அதிக வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த தனது கணவர் மரணமடைந்த போதும், அவரது சடலத்தை புதைக்க மனமில்லாமல் தொடர்ந்து அதனுடனே வாழ்ந்து வந்துள்ளார் 69 வயது பாட்டி ஒருவர்.
வயதான தம்பதிகள்...
பெல்ஜியம் நாட்டின் தலைநகர் புரூசெல்ஸ்ன் புறநகர் பகுதியில் வசித்து வந்த வயதான தம்பதிகள் 73 வயதுடைய கணவர் மார்சல் மற்றும் அவரது 69 வயது மனைவி.
மரணம்...
இந்நிலையில், ஆஸ்துமாவால் அவதிப்பட்டு வந்த மார்சல் கடந்த நவம்பரில் உடல்நலம் குன்றி இறந்து விட்டார். ஆனால், அவருடைய உடலை புதைக்கவோ அல்லது எரிக்கவோ மனமில்லாத அவரது மனைவி அதனை ஒரு பெட்டியில் வைத்து விட்டாராம்.
பொய்...
தினமும், கணவரின் சடலம் இருந்த பெட்டியின் அருகிலேயே படுத்து உறங்கியுள்ளார் மனைவி. இப்படியே கிட்டத்தட்ட ஒரு வருடம் ஓடி விட்டது. கணவரைக் குறித்து நலம் வி்சாரிக்கும் அக்கம்பக்கத்தாரிடம் அவர் சிகிச்சைக்காக வெளியேசென்றிருப்பதாகத் தெரிவித்து வந்துள்ளார் மனைவி.
பெட்டிக்குள் சடலம்...
இந்நிலையில், கடந்த ஓராண்டாக வாடகைப் பணம் தராமல் சாக்குபோக்கு கூறி வந்துள்ளார் மனைவி. அதனையடுத்து, வீட்டு உரிமையாளர் வீட்டை அதிரடியாக காலி செய்ய முயன்ற போது பெட்டிக்குள் கணவர் சடலம் இருப்பதைக் கண்டு அதிர்ந்து விட்டார்.
போலீஸ் விசாரணை....
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி அடக்கம் செய்தனர். கணவரின் மரணம் குறித்து மனைவியிடம் நடத்திய விசாரணையில், அவர் ஓராண்டுக்கு முன்னர் நோயுற்று மரணமடைந்தது தெரிய வந்துள்ளது.