'கே' திருமண சான்று தராத அதிகாரிக்கு ஜெயில்!- அமெரிக்க நீதிபதி அதிரடி தீர்ப்பு!
ஆஷ்லேண்ட், கெண்டகி(யு.எஸ்): கே தம்பதிகளுக்கு திருமணப் பதிவு பத்திரம் வழங்க மறுத்த அதிகாரிக்கு அமெரிக்க நீதிபதி சிறை தண்டனை விதித்துள்ளார். சட்டத்தை மதித்து செயல்படாததால் துறை சார்ந்த ஒழுங்கு நடவடிக்கைக்கும் பரிந்துரைத்துள்ளார்.
கெண்டகி மாநிலத்தின் ரோவன் கவுண்டி க்ளார்க் கிம் டேவிஸ். தமிழகத்தின் தாலுகா அலுவலக தாசில்தார் பதவிக்கு இணையான இந்த பதவிக்கு, கிம் டேவிஸ் தேர்தல் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சமீபத்திய அமெரிக்க உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி, அனைத்து மாநிலங்களுங்கும் ஓரினச் சேர்க்கையாளர்களின் திருமணத்திற்கு சட்டபூர்வ அங்கீகாரம் அளித்து திருமணச் சான்றிதழ் வழங்க வேண்டும்.
கிம் டேவிஸ் தனது அதிகாரத்திற்கு உட்பட்ட கவுண்டியில் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு திருமணப் பதிவுச் சான்றிதழ் அளிக்க மறுத்து வந்தார். தான் சார்ந்த மத கோட்பாடுகளுக்கும், கடவுள் நம்பிக்கைக்கும் எதிரான ஓரினச் சேர்க்கை திருமணத்திற்கு தன்னால் கையெழுத்திட்டு சான்றிதழ் வழங்க முடியாது என்று மறுத்தார்.
ஓரினச் சேர்க்கையாளர்கள் இவருடைய நடவடிக்கைக்கு எதிராக வழக்கு தொடர்ந்தனர். கிழக்கு கெண்டகி, அமெரிக்க மாவட்ட நீதிபதி டேவிட் பன்னிங் கிம் டேவிஸ், அமெரிக்கச் சட்டப்படி திருமண சான்றிதழ் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் தொடந்து மறுத்து வந்த கிம் டேவிஸை கண்டித்த நீதிபதி, அவருக்கு சிறை தண்டனை விதித்துள்ளார். தனது உதவியாளர் மூலம் ரோவன் கவுண்டியில் ஓரினச் சேர்க்கையாளர் திருமண சான்றிதழ் வழங்கும் வரை கிம் டேவிஸுக்கு சிறைத் தண்டனை தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீதிபதியைக் கண்டித்து கிம்முக்கு ஆதரவாகவும், அவருக்கு எதிராகவும் நீதிமன்ற வளாகத்தில் முழக்கங்கள் எழுந்தன.
நீதிபதியின் சிறைத் தண்டனை தீர்ப்பை கேட்ட கிம் டேவிஸ் ‘மிக்க நன்றி நீதிபதி அவர்களே' என்று சிரித்துக் கொண்டே சிறை சென்றார்.
'சட்டத்தை மதித்து செயல்படாதவர்களை அனுமதித்தால் அது மாபெரும் சட்டச் சிக்கலுக்கு வழிவகுக்கும். எனவே சிறை தண்டனை அவசியமானதாகும். மேலும் இவர் மீது துறை சார்ந்த நடவடிக்கைகளும் வேண்டும்,' என்று நீதிபதி டேவிட் பன்னிங் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் வெள்ளிக்கிழமை, ரோவன் கவுண்டி டெபுடி க்ளார்க் ப்ரையன் மேசன், ஸ்மித் - யேட்ஸ் ஒரின தம்பதியினருக்கு திருமணச் சான்றிதழ் வழங்கியுள்ளார். இதன் மூலம் கிம் டேவிஸ் விடுதலையாவாரா என்ற கேள்வி எழுந்த நிலையில், தனது உத்தரவு இல்லாமல் வழங்கப்பட்ட இந்த சான்றிதழ் செல்லாது என கிம் டேவிஸ் தெரிவித்துள்ளார். திங்கள் கிழமை அமெரிக்க தொழிலாளர் தின விடுமுறை என்பதால் தொடர்ந்து சிறையில் இருக்கும் கிம் டேவிஸ்க்கு, விடுதலை உண்டா? என்று செவ்வாய்க்கிழமை தான் தெரிய வாய்ப்புள்ளது.
பொதுவாக எல்லா அமெரிக்கர்களும் ‘கடவுளே அமெரிக்காவை ஆசிர்வதியுங்கள் ( God Belss America) என்று சொல்வார்கள். தற்போது கடவுள் நம்பிக்கைக்கும் சட்டத்திற்கும் இடையே ஒரு புது போராட்டம் தொடங்கியுள்ளது. நீதிபதி தீர்ப்புக்கு கடவுள் என்ன தீர்ப்பு சொல்லப்போகிறார் என்ற ஆவல் எழுந்துள்ளது.