ஒட்டகத்தின் மீது இருந்தாலும், கணவருடன் மனைவி உறவு வைக்க வேண்டும்... மத தலைவர் சர்ச்சை பேட்டி
கோலாலம்பூர்: ஒட்டகத்தின் மீது பயணப்படும்போது, கணவன் கேட்டாலும், உடனே செக்ஸ் வைத்துக்கொள்ள கடமைப்பட்டவர்தான் மனைவி என்று மலேசிய இஸ்லாமிய தலைவர் பெரக் முப்தி தாம் சகாரியா கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மனைவியை கட்டாயப்படுத்தி உடலுறவு கொள்வதை தவறு என்று சட்டத்தில் வரையறுக்க வேண்டும் என்று மலேசியாவில் பெண்கள் ஆதரவு அமைப்புகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. மனைவியை பலவந்தம் செய்வது பலாத்காரமாக கருதப்பட வேண்டும் என்பது பெண்கள் அமைப்பின் கோரிக்கையாகும்.
ஆனால் இதற்கு சகாரியா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். திருமண உறவுக்குள் நடைபெறும் பாலுறவில் பலாத்காரம் என்ற வார்த்தைக்கே இடமில்லை என்று அவர் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், கணவன் ஆசைப்பட்டு கேட்கும்போது, செக்ஸ் வைத்துக்கொள்ள மாட்டேன் என்று சொல்லும் உரிமை மனைவிக்கு கிடையாது.
ஒட்டகத்தின் மீது பயணித்துக் கொண்டிருக்கும்போது, கணவன் செக்ஸ் வைக்க ஆசைப்பட்டாலும், உடனே அதை நிறைவேற்றுவதே மனைவியின் பணியாகும் என்றுதான் இறைதூதரும் கூறியுள்ளார்.
மாதவிடாய் சமயத்தில் மட்டுமே மனைவியுடன் உடலுறவு வைத்துக்கொள்ள கூடாது என்று குர்ரான் கூறியுள்ளது. உடல் நலம் சரியில்லாவிட்டாலும், சமீபத்தில்தான் குழந்தை பெற்றிருந்தாலும், கணவருடன் செக்ஸ் வைத்துக்கொள்ள மனைவி மறுக்கலாம். பிற சமயங்களில் கணவனின் விருப்பத்தை மனைவி நிறைவேற்றியே தீர வேண்டும் என்றார்.
இதுகுறித்து அனைத்து பெண்கள் ஆக்ஷன் சொசைட்டி அமைப்பு இதுகுறித்து கூறுகையில், "மனைவியை கட்டுப்படுத்தும் லைசென்ஸ் கணவரிடம் இருப்பதாக கூறுவது அதிர்ச்சியளிக்கிறது. திருமண பந்தத்தில் ஈடுபடுவதாலேயே, ஒரு பெண்ணின் உடலில் அவளுக்கு அதிகாரம் இல்லை என்றும், கணவன் அவளது உடலை உரிமை எடுத்துக்கொள்ளலாம் என்று சொல்வதும் சரியில்லை. திருமண பந்தந்தத்தால், ஒரு பெண் தனது அடிப்படை மனித உரிமையை இழக்க முடியாது" என்றுள்ளது.