உலகின் முதல் எலக்ட்ரிக் மோட்டாருடன் கூடிய செயற்கைக் கோள்.... வெற்றிகரமாக செலுத்தப்பட்டது!
புளோரிடா: அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ்புளரேஷன் டெக்னாலஜிஸ் (ஸ்பேஸ்எக்ஸ்) நிறுவனம், தனது பால்கன் 9 ராக்கெட்டை புளோரிடாவிலிருந்து விண்வெளியில் மார்ச் 1ம் தேதி ஏவியது. அந்த ராக்கெட்டில் 2 செயற்கைக் கோள்கள் இணைத்து அனுப்பப்பட்டன. அவற்றை பால்கன் ராக்கெட் விண்வெளியில் வெற்றிகரமாக செலுத்தியது.
கேப் கேனவரல் ராக்கெட் ஏவுதளத்திலிருந்து பால்கன் ராக்கெட் அனுப்பப்பட்டது. உலகின் முதல் எலக்ட்ரிக் தகவல் தொடர்பு செயற்கைக் கோள் என்ற பெருமை இந்த செயற்கைக் கோள்களுக்கு உண்டு.
இதில் ஒரு செயற்கைக் கோள், ஈடெல்சாட் என்ற பிரெஞ்சு நிறுவனத்திற்குச் சொந்தமானதாகும். இன்னொன்று ஏபிஎஸ் எனப்படும் ஏசியா பிராட்காஸ்ட் செயற்கைக் கோள் நிறுவனத்திற்கானதாகும்.
இருபது வருடம்...
இந்த இரு செயற்கைக் கோள்களும் முழு அளவில் எலக்ட்ரிக் என்ஜின்களில் இயங்கக் கூடியவையாகும். இருபது வருடம் இவை விண்வெளியில் சுற்றி வரும்.
எலக்ட்ரிக் என்ஜின்கள்...
வழக்கமாக ராக்கெட் திரஸ்டர்கள்தான் செயற்கைக் கோள்களில் பொருத்ப்பட்டிருக்கும். ஆனால் இவற்றில் எலக்ட்ரிக் என்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் செயற்கைக் கோள்களின் எடை குறையும், மிகச் சிறப்பாகவும் செயல்படும்.
இன்னும் 2....
இந்த ஆண்டுக்குள் மேலும் 2 பால்கன் 9 ராக்கெட்களை செலுத்த ஸ்பேஸ்எக்ஸ் திட்டமிட்டுள்ளது.
துர்க்மேனிச்தான் செயற்கைக்கோள்...
அடுத்த ராக்கெட்டை மார்ச் 21ம் தேதி ஸ்பேஸ்எக்ஸ் செலுத்துகிறது. அதில் துர்க்மேனிஸ்தான் அரசின் தகவல் தொடர்பு செயற்கைக் கோள் எடுத்துச் செல்லப்பட்டு விண்வெளியில் விடப்படும்.