ஜஸ்ட் 30 செகண்ட்ஸ் போதும்... சிரியாவில் வெடிக்க காத்திருக்கும் "3வது உலகப் போர்"
டமாஸ்கஸ்: சிரியாவின் வான்பரப்பில் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படைகளின் போர் விமானங்களும் ரஷ்யாவின் போர் விமானங்களும் ஐ.எஸ். தீவிரவாதிகளின் நிலைகள் மீது சீறிப் பாய்ந்து தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. ஆனால் இந்த போர் விமானங்கள் தவறுதலாக மோதினால், தாக்குதல் நடத்தினால் உடனடியாக உலகப் போர் வெடித்துவிடும் என்ற தவிர்க்க முடியாத ஒரு நிலை உருவாகி உள்ளது என எச்சரிக்கின்றனர் ராணுவ வல்லுநர்கள்.
சிரியாவில் அதிபர் ஆசாத் ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதற்கான உள்நாட்டுப் போர் 2011ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த உள்நாட்டு கிளர்ச்சிக்கு அமெரிக்கா தலைமையிலான நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. மேலும் சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தினர் பல நகரங்களைக் கைப்பற்றியுள்ளனர். இவற்றை மீட்கவும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படைகள் வான்வழித் தாக்குதலை நடத்தி வருகின்றன.
அமெரிக்கா அணியில் இங்கிலாந்து, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, செளதி அரேபியா, கத்தார், பெல்ஜியம், ஜோர்டான், நெதர்லாந்து, டென்மார்க் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் இணைந்திருக்கின்றன. இதில் ஜோர்டான், துருக்கி இரண்டும் சிரியாவின் அண்டை நாடுகள். இந்த நாடுகளின் துணையுடன் சிரியாவின் வான்பரப்புக்குள் நுழைந்து ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் ரஷ்யாவும் களத்தில் குதித்திருக்கிறது. ஆனால் சிரியா அதிபர் ஆசாத் அரசைக் காப்பாற்றுவதற்காக ரஷ்யா களமிறங்கியுள்ளது. அதிபர் ஆசாத்துக்கு எதிரான ஐ.ஸ்.ஐ.எஸ். இயக்கம் உட்பட அனைத்து கிளர்ச்சி குழுக்கள் மீதும் தாக்குதல்களை நடத்தி வருகிறது ரஷ்யா. இதற்கு சிரியா, ஈரான், சீனா, லெபனான் மற்றும் ஈராக் ஆகிய நாடுகள் ஆதரவு தெரிவித்திருக்கின்றன.
அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படைகள் கடந்த சனிக்கிழமையன்று ஐ.எஸ். நிலைகள் மீது 24 தாக்குதல்களை நடத்தியிருப்பதாக அறிவித்துள்ளது.
அதேபோல் ரஷ்யாவோ கடந்த சனிக்கிழமையன்று ஐ.எஸ். நிலைகள் மீது 55 தாக்குதல்களை நடத்தியிருப்பதாக தெரிவித்துள்ளது. இதில் அமெரிக்கா ஆதரவு கிளர்ச்சி குழுக்களின் நிலைகளும் அடங்கும்.
இப்படி அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படைகளும் ரஷ்யாவும் சிரியா வான்பரப்பில் மாறி மாறி தாக்குதல்களை நடத்தி வருகின்றன. அமெரிக்காவின் எஃப்.16 போர் விமானங்களும் ரஷ்யாவின் எஸ்யூ 34 ரக போர் விமானங்களும் ஒரு சில இடங்களில் மிக நெருங்கியபடி பறந்து சென்று தாக்குதல்களை நடத்தியிருக்கின்றன. இந்த இரு விமானங்களும் மோதிக் கொள்ள ஜஸ்ட் 30 செகண்ட்ஸ்தான்.. ஆனால் தப்பித்துக் கொண்டன.
இது சிரியாவில் மட்டுமல்ல உலக நாடுகளிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த இரு தரப்பு விமானங்களும் தவறுதலாக மோதிக் கொண்டாலோ சுட்டு வீழ்த்தபட்டாலோ போதும்...அடுத்த வினாடியே 3வது உலகப் போர் சிரியாவை முன்வைத்து வெடித்துவிடும் என்கின்றனர் ராணுவ ஆய்வாளர்கள்.
ரஷ்யாவின் நட்பு நாடான ஈரான் தமது வான் எல்லையை பயன்படுத்த ஏற்கெனவே அனுமதி அளித்துள்ளது. அத்துடன் ஈரானின் ராணுவத்தினர் லெபனான் எல்லையில் குவிக்கப்பட்டுள்ளனர்.
லெபனானும் ஈராக்கும் ஈரானைத் தொடர்ந்து ரஷ்யாவின் கரத்தை வலுப்படுத்த கைகோர்க்க இருக்கின்றன. சிரியாவை முன்வைத்து உலக நாடுகள் இரு அணிகளாகப் பிளவுபட்டு நிற்பது ஒரு உலகப் போருக்கான முன்னோட்டமாக தோன்றுகிறது என்றே எச்சரிக்கின்றனர் ராணுவ வல்லுநர்கள்.