யானைகளை வெட்டி... சிங்கக்கறி விருந்தளித்து... 91வது பிறந்தநாளை ஆடம்பரமாகக் கொண்டாடிய முகாபே!
ஹராரே : ஜிம்பாப்வேயில் 35 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள அதிபர் ராபர்ட் முகாபேயின் 91வது பிறந்தநாள் யானைகள் வெட்டி, சிங்கக்கறி விருந்துடன் ஆடம்பரமாகக் கொண்டாடப் பட்டுள்ளது.
கடந்த 1980ம் ஆண்டு முதல் தொடர்ந்து 35 ஆண்டுகளாக ஜிம்பாப்வேயில் அதிபராக இருந்து வருகிறார் ராபர்ட் முகாபே. இவர் தனது 91-வது பிறந்தநாளை நேற்றுக் கொண்டாடினார். விக்டோரியா பால்ஸ் பகுதியின் பிரபல நட்சத்திர ஹோட்டலில் நடந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் யானைகள் பலியிடப்பட்டன.
பெரிய அளவிலான கேக்குகள் வெட்டப்பட்டு, சிங்கக் கறி மற்றும் காட்டெருமைக் கறியுடன் விருந்து பரிமாறப்பட்டது.
உலகின் மிக வயதான அதிபர்...
முகாபே தான் உலகின் வயதான அரச தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக சுமார் 10 லட்சம் டாலர்கள் செலவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஆக்கிரமிக்க வேண்டும்...
பிறந்த நாள் விழாவில் பேசிய ராபர்ட் முகாபே, ‘ஜிம்பாப்வேயில் பெரும் நிலப்பகுதிகளை வைத்துள்ள சஃபாரி நிறுவனங்களை நாட்டுமக்கள் ஆக்கிரமிக்க வேண்டும்' என அழைப்பு விடுத்தார்.
பிரிட்டன் நிறுவனங்கள்
மேலும், ஜிம்பாப்வே மீது தடைகளை விதித்திருந்த பிரிட்டனைச் சேர்ந்தவர்களால் இந்த நிறுவனங்கள் நடத்தப்படுவதாலேயே இந்த அழைப்பை விடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அதிருப்தி...
இந்நாட்டில் உள்ள பல லட்சக்கணக்கான மக்கள் மிகவும் கொடுமையான வறுமையின் பிடியில் சிக்கித்தவித்து வரும் வேளையில் முகாபே அளித்த இந்த விருந்து எதிர்க்கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே அதிருப்தியை உண்டாக்கியுள்ளது.
குற்றச்சாட்டு...
இந்த பிறந்தநாள் விருந்துக்காக ஏழை, எளிய மக்களிடமிருந்து பணம் மற்றும் பொருட்களை ஆளும்கட்சியினர் கட்டாய வசூல் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.