இது மோசமான தோல்வி
இதுகுறித்து அந்த அணி கேப்டன் ஏபிடிவில்லியர்ஸ் கூறியதாவது: வெற்றியும், தோல்வியும் விளையாட்டில் சகஜமானதுதான். ஆனால் 130 ரன்கள் வித்தியாசத்தில் நாங்கள் தோற்றதை ஜீரணித்துக்கொள்ளவே முடியவில்லை. இந்த தோல்வியை நினைக்கும்போது, எனக்கு மிகவும் சங்கடமாக உள்ளது.
இப்படி பொசுக்கென்று போய்விட்டதே..
போட்டியின் கடைசி பந்து வரை எங்கள் அணி போட்டியில் இருந்து விலகிச் செல்லாமல் இருக்க வேண்டும் என்றுதான் நான் விரும்பினேன். ஆனால் இப்படி மொத்தமாக இந்தியாவின் ஆதிக்கத்தில் சரணடைவோம் என்று எதிர்பார்க்கவில்லை.
தன்னம்பிக்கை தகர்ந்துவிட்டது
காலிறுதிக்கு தகுதி பெறுவது பிரச்சினைகிடையாது. ஆனால் நாங்கள் விளையாடிய விதம்தான் மிக மோசம். இந்த தோல்வியின் மூலம் அணியின் தன்நம்பிக்கை அடிவாங்கிவிட்டது. எங்களது காயத்துக்கு நாங்களே மருந்து போட்டுக்கொள்ள வேண்டியதுதான்.
இந்திய பந்து வீச்சு சூப்பர்
எங்கள் அணியின் மோசமான பேட்டிங்கும், இந்தியாவின் திறமையான பவுலிங்கும் இணைந்துதான் தென் ஆப்பிரிக்காவை தோல்விக்குள்ளாக்கியது. அவுட் ஆனபிறகு, ஹசிம் ஆம்லா என்னிடம் பேசினார். அப்போது இந்தியாவின் பந்து வீச்சு மிகவும் அருமையாக இருந்ததாக என்னிடம் சொன்னார்.
ஓடியிருக்க கூடாது..
இரு ரன் அவுட்டுகள் தென் ஆப்பிரிக்காவை குலைத்துப்போட்டுவிட்டன. நானும், டேவிட் மில்லரும், எந்த பந்து வீச்சாளராலும் இன்றி, ரன்-அவுட்டுகளால் பெவிலியன் திரும்பியதை நினைத்துப்பார்க்க முடியவில்லை. இந்திய ஃபீல்டர்கள் திடீரென சிறப்பாக ஃபீல்டிங் செய்துவிட்டதாக நான் நினைக்கவில்லை. அவர்களின் திறமையை நாங்கள் நன்கு அறிவோம். ஆனால், விக்கெட்டுகளுக்கு நடுவிலான ஓட்டத்தில் தென் ஆப்பிரிக்க வீரர்கள்தான் தவறு செய்துவிட்டோம். டாப்-6 பேட்ஸ்மேன்களில் 2பேர் ரன் அவுட் ஆனால் எப்படி அணியால் தாங்கிக்கொள்ள முடியும்.
பிட்ச் டஃப்பா இருந்தது..
மெல்போர்ன் பிட்ச் இரட்டை தன்மையுடையதாக இருந்தது. ஒரே இடத்தில் பிட்ச் செய்யப்பட்ட பந்து சில நேரங்களில் பவுன்சராகவும், சில நேரங்களில் விக்கெட்டை நோக்கியும் பாய்ந்து வந்தது. நான் பேட்டிங் செய்தபோதே பேட்டிங் செய்வதில் உள்ள கஷ்டத்தை உணர்ந்தேன். தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் பவுன்சர் பந்துகளை சிறப்பாக அடித்து ஆடக்கூடியவர்கள். அப்படியிருந்தும் இந்தியாவின் பவுன்சர் தாக்குதலில் தடுமாறியதற்கு பிட்சும் ஒரு காரணம். இவ்வாறு ஏபிடிவில்லியர்ஸ் தெரிவித்தார்.