கடமைக்காக ஆடாதீர்கள்
ஷிகர் தவானின் ஆட்டம் இந்த போட்டியின் முக்கியமான அம்சம். ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் 25 ஓவர்கள் வரை பொறுப்பாக ஆடிவிட்டாலே தங்களது கடமை முடிந்து விட்டதாக நினைக்கிறார்கள். ஆனால் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் விளையாடும்போது, நன்கு ஆடிக் கொண்டிருக்கும் வீரர் கடைசி கட்ட ஓவர்கள் வரை நிலைத்து நிற்பது அவசியம். ஏனெனில், அனைத்து வீரர்களும் இந்த பிட்சில் நிலைத்து ஆடிவிட முடியாது. எனவே கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி அணிக்கு தேவையான அளவுக்கு கூடுதல் ரன் அடிக்க வேண்டியது கட்டாயம்.
ஷிகர் ஒரு நல்லவர்.. வல்லவர்
ஷிகர் தவான், சதம் அடித்ததும் கடமை முடிந்துவிட்டது என்று ஆடாமல், பொறுப்பாக ஆடி 137 ரன்கள் எடுத்தார். கூடுதலாக கிடைக்கும் 20 ரன்கள் கூட இதுபோன்ற பிட்சுகளில் இந்தியாவுக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.
பத்து நிமிச வேலைதாங்க ஃபார்ம்
ஷிகர் தவான் ஃபார்மில் இல்லை என்று விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. என்னைப் பொறுத்தளவில், ஃபார்ம் என்பது 10 அல்லது 15 நிமிட வேலைதான். அந்த நிமிடங்களில் சரியாக ஆடிவிட்டால் வீரர்கள் ஃபார்முக்கு வந்துவிட்டதாக அர்த்தம். இந்த தொடரின் முதல் போட்டியில் ஷிகர் தவான் சிறிது நேரம் நின்று ஆடியதுதான் அவரது ஃபார்முக்கு காரணம்.
பிட்சை படித்து பந்து வீசினர்
இந்திய பந்து வீச்சாளர்கள் அருமையாக திறமையை வெளிப்படுத்தினர். பிட்சின் தன்மைக்கு ஏற்பட சரரியான இடங்களில் பந்தை பிட்ச் செய்து அசத்தினர். பிட்ச் ஸ்விங்கிற்கு ஒத்துழைத்தபோது, அதற்கேற்ற இடங்களில் பந்துகளை வீசினர். ஸ்விங் ஆகாமல் போனபோது, அதற்கேற்ற இடங்களில் பந்தை வீசினர். ஆனால் எளிதில் அடித்துவிடும்படியாக, அகலமாக பந்தை வீசவில்லை.
அந்த பத்து ஓவர்கள்தான் அபாரம்
தென் ஆப்பிரிக்கா பேட்டிங் செய்தபோது முதல் 10 ஓவர்களில் இந்திய பந்து வீச்சாளர்கள் முழுமையாக ஆதிக்கம் செலுத்தினர். இதுபோன்ற ஒரு சிறந்த பவுலிங்கை சமீபத்தில் இப்போதுதான் பார்க்கிறேன்.
என்னமா பாயுறாங்க..
இந்திய அணியில் தலை சிறந்த ஃபீல்டர்கள் உள்ளனர். இந்திய ஃபீல்டர்கள் பத்து முதல் பதினைந்து ரன்கள் வரை சேமித்துவிடுகின்றனர். அதுமட்டுமின்றி ஆவரேஜுக்கும் அதிகமாகவே ஃபீல்டிங் செய்யும் பவுலர்களையும் இந்தியா பெற்றுள்ளது. அனைத்து ஃபீல்டர்களுமே சிறப்பாக விளையாடுவதால், எந்த ஃபீல்டரை எந்த இடத்தில் நிறுத்துவது என்பதை யோசித்து நான் நேரத்தை செலவிட வேண்டியதில்லை. போட்டியின் அணுகுமுறையை குறித்து மட்டுமே யோசிக்க எனக்கு நேரம் கிடைக்கிறது. இதனால் எனது பணிப்பளு பெருமளவுக்கு குறைந்துவிடுகிறது. இவ்வாறு டோணி தெரிவித்தார்.