மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவுடனான 3வது டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்றைய ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 108 ரன்களை எடுத்துள்ளது. முன்னதாக விளையாடிய ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 530 ரன்களைக் குவித்திருந்தது.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 2 போட்டிகளின் முடிவில் ஆஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்க 3வது டெஸ்ட் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று தொடங்கியது.
இந்திய அணியில் லோகேஷ் ராகுல், ஆஸ்திரெலியா அணியில் ஜோ பர்ன்ஸ் அறிமுக வீரர்களாக இடம் பெற்றனர். டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்தது. தொடக்க வீரர்களாக ரோஜர்ஸ், வார்னர் களமிறங்கினர். உமேஷ் யாதவ் வீசிய 2வது ஓவரின் கடைசி பந்தில், வார்னர் தவானிடம் கேட்ச் கொடுத்து டக் அவுட் ஆனார்.
ரோஜர்ஸ் , வாட்சன் ஜோடி 2வது விக்கெட்டுக்கு பொறுப்புடன் விளையாடி 114 ரன் சேர்த்தது. இருவரும் அரை சதம் விளாசினர். ரோஜர்ஸ் 57 ரன் எடுத்து ஷமி வேகத்தில் விக்கெட் கீப்பர் டோணியிடம் பிடிபட அஷ்வின் சுழலில் எல்பிடபுள்யு ஆனார் வாட்சன்.
ஒரு விக்கெட் இழப்புக்கு 115 ரன் என்ற நிலையில் இருந்த ஆஸ்திரேலியா அணி அடுத்தடுத்து 2 விக்கெட் விழுந்ததால் 115/3 என திடீர் சரிவை சந்தித்தது. இந்த நிலையில் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் , ஷான் மார்ஷ் ஜோடி 4வது விக்கெட்டுக்கு நிதானமாக விளையாடி 69 ரன் சேர்த்தது. ஷான் மார்ஷ் 32 ரன் எடுத்து ஷமி வேகத்தில் டோணியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
அடுத்து வந்த பர்ன்ஸ் அதிக நேரம் நீடிக்கவில்லை. அவர் 13 ரன் மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்பினார். முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 259 ரன் எடுத்திருந்தது. கேப்டன் ஸ்மித் 72 ரன் ஹாடின் 23 ரன்னுடன் களத்தில் இருந்தனர்.
இந்திய பந்துவீச்சில் ஷமி, உமேஷ் தலா 2, அஷ்வின் 1 விக்கெட் வீழ்த்தினர். 2வது நாளாக இன்றும் ஆஸ்திரேலியா வீரர்கள் தங்களது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஸ்மித் 192 ரன்கள் குவித்து அவுட் ஆனார். அவரது இரட்டை சதம் இலக்கு நிறைவேறவில்லை.
இப்படி விறுவிறுவென 530 ரன்களைக் குவித்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் ஆஸ்திரேலியா அணி இழந்தது. இந்தியாவின் ஷமி 4 விக்கெட்டுகளையும் உமேஷ், அஸ்வின் தலா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதனைத் தொடர்ந்து இந்திய அணி முதலாவது இன்னிங்ஸை விளையாடியது. தொடக்க வீரர்களாக முரளி விஜய், தவான் களமிறங்கினர். இருவரும் பொறுப்பாக விளையாடி வந்தனர். ஆனால் 55 ரன்கள் எடுத்த நிலையில் தவான் அவுட் ஆனார்.
அதன் பின்னர் முரளி விஜய்யுடன் புஜாரா இணைந்து கொண்டார். இன்றைய ஆட்ட நேர முடிவில் முரளி விஜய் 55 ரன்களுடனும் புஜாரா 25 ரன்களுடன் அவுட் ஆகாமல் களத்தில் நிற்க, இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 108 ரன்களை எடுத்திருந்தது.