லீட்ஸ் : இந்தியாவின் இளம் கோல்ப் வீராங்கனை அதிதி அசோக் இங்கிலாந்து நாட்டின் லீட்ஸ் நகரில் நடந்து வந்த லேடீஸ் பிரிட்டிஷ் அமெச்சூர் கோல்ப் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்று வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளார். இந்த போட்டியில் வெற்றி பெறும் முதல் இந்திய வீராங்கனை இவர் ஆவார்.
பெங்களூரை சேர்ந்த இவர் இதற்கு முன்னதாக கடந்த ஜூலை மாதம் செயின்ட்.ஆண்ட்ரூவ்ஸில் நடந்த ரூல் டிராபி போட்டியிலும் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார்.
2015 ஐரோப்பிய மகளிர் அமெச்சூர் போட்டியில் 2-வது இடத்தை பிடித்திருந்தார். மேலும், நிக்கோல்ஸ் டிராபி, என்விட்டி டிராபி போன்ற பட்டங்களையும் அதிதி பெற்றவர்.
தற்போது உலக கோல்ப் தரவரிசையில் 52-வது இடத்தில் உள்ளார். இதுவரை 30 நாடுகளில் இருந்து பங்குபெற்ற வீரர்களில் 39 பேரை அதிதி வென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.