திருவனந்தபுரம்: இந்திய தடகள வீராங்கனை சுதா சிங், பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரை தொடர்ந்து மாராத்தான் வீராங்கனை ஜெய்ஷாவிற்கும் பன்றிக்காய்ச்சல் இருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதியாகியுள்ளது.
அண்மையில் நடந்து முடிந்த ரியோ ஒலிம்பிக் விளையாட்டில் இந்தியா சார்பில் கேரளாவைச் சேர்ந்த 33 வயது ஜெய்ஷா கலந்துகொண்டார். இவர் பெண்களுக்கான 42 கி.மீ மாரத்தனில் பங்கேற்றார். இந்த போட்டியில் 89வது இடத்தை பிடித்தார் ஜெய்ஷா. இலக்கை 2 மணி 47 நிமிடம் 19 வினாடிகளில் அவர் கடந்தார்.
இதனிடையே போட்டியின் போது தனக்கு இந்தியா சார்பில் தண்ணீர் கூட வழங்கவில்லை எனவும், இதனால் தான் உயிருக்கே போராட வேண்டிய நிலை இருந்ததாகவும் புகார் கூறியிருந்தார். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ சோதனையில் ஹெச்1என்1 வைரஸ் (பன்றி காய்ச்சல்) இருப்பது தெரியவந்துள்ளது. ஏற்கனவே ஒலிம்பிக்கில் தடகள போட்டியில் பங்கேற்ற இந்திய வீராங்கனை சுதாசிங்கிற்கு பன்றி காய்ச்சல் வந்துள்ளது உறுதியாகியுள்ள நிலையில், தற்போது ஜெய்ஷாவிற்கும் பன்றிகாய்ச்சல் வந்துள்ளது மருத்துவ பரிசோதனையில் உறுதியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.