ஹோபர்ட்: முத்தரப்பு கிரிக்கெட் போட்டியில் இன்று பரபரப்பான ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி வெற்றிவாகை சூடியது ஆஸ்திரேலியா. கடைசி ஓவர் வரை பரபரப்புடன் இருந்தது போட்டி.
இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய அணிகள் இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் போட்டித் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.
ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான லீக் ஆட்டங்களில் தோல்வியை தழுவிய இந்திய அணி கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் தொடரின் 4வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் இன்று ஹோபர்ட் நகரில் மீண்டும் மோதின.
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, பீல்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து பேட்டிங் செய்து விளையாடிய இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் மொயீன் அலி மற்றும் இயான் பெல் அணிக்கு வலுவான தொடக்கத்தை ஏற்படுத்தினர். இருவரும் கைகோர்த்து 113 ரன்கள் அடித்திருந்த நிலையில் அலி 46 ரன்களில் பவுல்க்னெர் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
66 ரன்னுடன் களத்தில் இருந்த இயான் பெல்லுடன் டெய்லர் களமிறங்கினார். டெய்லர் 5 ரன்களில் அவுட் ஆனார். இதனையடுத்து களமிறங்கிய ரூட், இயான் பெல்லுக்கு இணையாக விளையாடினார். அதிரடி காட்டிய பெல் 141 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
முன்னாள் காதலி தொடர்பான சர்ச்சையில் சிக்கிய, மோர்கன், ரன்எதுவும் எடுக்காமல் முதல் பந்திலேயே அவுட் ஆனார். ரூட் 69 ரன்களில் அவுட் ஆனார். இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து வீரர்கள் குறைந்த ரன்களிலே அவுட் ஆனார்கள். இங்கிலாந்து அணி 50 ஓவர்களுக்கு 8 விக்கெட்களை இழந்து 303 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியாவிற்கு 304 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது. கடைசி நேரத்தில் இங்கிலாந்தை கட்டுப்படுத்துவதில் ஆஸி. பவுலர்கள் திறமையை காண்பித்தனர்.
இதையடுத்து பேட்டிங்கை தொடங்கிய, ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர்கள் ஆரோன் பின்ச் மற்றும் ஷான் மார்ஷ் முறையே 32 ரன்கள் மற்றும் 45 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கத்தை கொடுத்தனர்.
கேமரூன் ஒய்ட் டக் அவுட் ஆகி ஏமாற்றினாலும், மேக்ஸ்வெல் மற்றும் ஜேம்ஸ் பாக்னர் தலா 37 மற்றும் 35 ரன்கள் எடுத்து கேப்டன், ஸ்டீவன் ஸ்மித்துக்கு நல்ல பார்ட்னர்ஷிப் கொடுத்து அவுட் ஆகினர். இதன்பிறகு களமிறங்கிய பிராட் ஹாடினும் தன் பங்குக்கு 42 ரன்களை குவித்தார். மறுமுனையில் அசையாமல் அதிரடி காண்பித்த ஸ்டீவன் ஸ்மித் சதம் அடித்து அசத்தினார்.
ஆட்டத்தின் கடைசி ஓவரில் ஆறு பந்துகளுக்கு 2 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை ஆஸ்திரேலியாவுக்கு. ஆனால் பந்தை சந்தித்த மொயிசெஸ் ஹென்ரிகியூஸ் முதல் இரு பந்துகளில் ரன் எடுக்க முடியவில்லை. 3வது பந்தின்போது சிங்கிள் ஓட முயன்று ரன் அவுட் ஆனார். இருப்பினும் ஸ்டீவன் ஸ்மித் மறுமுனைக்கு ஓடிவிட்டதால் ஆஸ்திரேலிய ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர்.
ஓவரின் நான்காவது பந்தை ஸ்மித் சிங்கிள் தட்டினார். அப்போது ஸ்கோர் சமன் ஆனது. 5வது பந்தை சந்தித்த மிட்சேல் ஸ்டார்க், சிங்கிள் ரன் எடுத்து ஆஸ்திரேலியாவுக்கு வெற்றியை தட்டிக்கொடுத்தார். 49.5 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்புக்கு 304 ரன்களை எடுத்து, 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தொடர்ந்து மூன்று வெற்றிகளை ருசித்த ஆஸ்திரேலியா, இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவுடன் இறுதி போட்டியில் மோதப்போவது இங்கிலாந்தா, இந்தியாவா என்பது அடுத்தடுத்த போட்டிகளில் தெரியவரும். ஒருவேளை இங்கிலாந்து இன்றைய போட்டியில் வென்றிருந்தால் இந்தியாவின் இறுதி போட்டி கனவு பொய்த்து போயிருக்கும்.