பெங்களூர்: கேப்டன், மிதாலி ராஜ் உள்ளிட்ட இந்திய வீராங்கனைகளின் பொறுப்பான ஆட்டத்தால், 4வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை சம நிலைக்கு கொண்டு வந்துள்ளது, இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி. தொடரின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் 5வது போட்டி வரும் புதன்கிழமை நடைபெற உள்ளது.
நியூசிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்தியாவும், அடுத்த இரு போட்டிகளில் நியூசிலாந்தும் வென்ற நிலையில், 4வது ஒருநாள் போட்டி இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அந்த அணியின் டேவைன் அதிகபட்சமாக 89 ரன்கள் எடுத்த நிலையில் நியூசிலாந்து அணி 49.5 ஓவரில் ஆல் அவுட் ஆனது. 221 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா ஆட தொடங்கியது. காமினி மற்றும் மந்தனா தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கினர்.
இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 49 ரன்கள் சேர்த்த நிலையில் காமினி 31 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து கேப்டன் மிதாலி ராஜ் களம் இறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
மந்தனா 66 ரன்கள் எடுத்தது அவுட் ஆனபோதிலும், அடுத்து களமிறங்கிய கவுர், 25 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்சர்கள் உதவியோடு 32 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா 44.2 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் நியூசிலாந்தை வீழ்த்தியது.
மிதாலி ராஜ் 81 ரன்களுடன் கடைசி வரை களத்தில் நின்றார். ஐந்து போட்டிகள் கொண்ட தொடர் 2-2 என தற்போது, சமநிலையில் உள்ளது. கடைசி போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும். ஐந்தாவது போட்டி புதன்கிழமை, இதே மைதானத்தில் நடைபெற உள்ளது.