கோவா: கோவா எப்.சி., அணிக்கு எதிரான இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் லீக் போட்டியில் சென்னை எப்.சி. அணி வெற்றி பெற்றது.
இந்தியாவில் முதன்முறையாக இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் இந்தாண்டு தொடங்கியுள்ளது. கோவாவில் நடந்த நேற்றைய லீக் போட்டியில் கோவா எப்.சி.-சென்னை அணிகள் மோதின.
போட்டியின் துவக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய சென்னை அணி முதல் பாதியின் 32வது நிமிடத்தில் கோல் போட்டு அசத்தியது. அணியின் தானச்சந்திரா சிங் முதல் கோல் அடித்தார். தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய சென்னை அணி 42வது நிமிடத்திலேயே அடுத்த கோலையும் பதிவு செய்தது. இதை எலானோ அடித்தார்.
கோவா அணி வீரர்களால் முதல் பாதியில் கோல் போட்டு பதிலடி கொடுக்க முடியவில்லை. இதையடுத்து முதல் பாதியின் முடிவில், சென்னை அணி 2-0 என முன்னிலை வகித்தது.பின் விறுவிறுப்பாக துவங்கிய இரண்டாவது பாதியில் கோவா அணியின் கிகோரி (65வது நிமிடம்) ஒரு கோல் அடித்தார். தொடர்ந்து போராடிய கோவா அணி வீரர்களால் மேற்கொண்டு கோல் எதுவும் அடிக்கமுடியவில்லை.
அதேபோல சென்னை அணி வீரர்களின் கோல் முயற்சியும் தோல்வியில் முடிந்தது. இறுதியில் சென்னை அணி 2-1 என்ற கோல் கணக்கில் கோவா அணியை வீழ்த்தியது.
சென்னை அணி தனது அடுத்த போட்டியில் சச்சின் டெண்டுல்கரின் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியுடனான போட்டியில் 21ம்தேதி சென்னையில் மோதுகிறது.