கோவை: தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற ஆசிய அளவிலான யோகா போட்டியில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த வைஷ்ணவி ஜூனியர் பிரிவில் இரு தங்கங்களை பெற்றதோடு ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் பெற்றார்.
கோவை தனியார் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வருபவர் வைஷ்ணவி. இவர் தாய்லாந்து நாட்டில் சமீபத்தில் நடைபெற்ற 13 வயது முதல் 15 வயது பிரிவினருக்கான ஆசிய அளவிலான யோகா போட்டியில் கலந்து கொண்டார். அதில் அவர் இரு தங்கப்பதக்கங்களையும், ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தையும் பெற்றார்.
இதுகுறித்து வைஷ்ணவி கூறுகையில், இதுவரை 1000 போட்டிகளில் கலந்து கொண்டு 200-க்கும் மேற்பட்ட தங்க மெடல்களை வாங்கியுள்ளேன். இதில் கொச்சி, குஜராத், பெங்களூர் ஆகிய இடங்களில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டிகளும் அடங்கும்.
என்னுடைய யோகா மூலம் கின்னஸ் மற்றும் லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பெற வேண்டும் என்பதே எனது லட்சியமாகும் என்றார். அவர் யோகா ராணி, யோகா நட்சத்திரம் உள்ளிட்ட பட்டங்களையும் இளம் சாதனையாளர் விருதையும் பெற்றுள்ளார்.
வைஷ்ணவிக்கு இலவச கல்வியை அளிப்பதோடு அவரது அனைத்து முயற்சிகளையும் ஆதரிக்கும் என்று பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.