தர்மசாலா: முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இரண்டாவதாக பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.
இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டி20 கிரிக்கெட் போட்டி இமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள தர்மசாலாவில் இன்று மாலை துவங்கி நடந்தது. டாஸ் வென்ற ஃபாஃப் டூப்பிளெச்சி தலைமையிலான தென்னாப்பிரிக்க அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து இந்திய அணியின் ரோஹித் சர்மாவும், ஷிகர் தவானும் களமிறங்கினர். தவான் 3 ரன்களில் ஆட்டமிழக்க விராட் கோஹ்லி களமிறங்கினார். கோஹ்லி அசத்திவிடுவார் என்று எதிர்பார்க்கையில் 42 ரன்களுடன் அவுட்டானார். ரோஹித் சர்மா நின்று விளையாடி 106 ரன்கள் எடுத்தார். 66 பந்துகளில் 106 ரன்கள் எடுத்து இந்திய அணிக்கு பலத்தை சேர்த்து அவுட்டானார் ரோஹித்.
அதன் பிறகு வந்த ரெய்னா, ராயுடு, கேப்டன் டோணி, பட்டேல் ஆகியோர் தங்கள் பங்கிற்கு ரன்கள் எடுத்தனர். டோணி தனக்கே உரிய ஸ்டைலில் கடைசி பந்தில் சிக்ஸ் அடித்து அணியின் ஸ்கோரை 199க்கு கொண்டு வந்து ஆட்டத்தை முடித்தார்.
இதையடுத்து தென்னாப்பிரிக்கா 200 ரன்கள் என்ற இலக்குடன் களத்தில் இறங்கியது. ஹாஷிம் ஆம்லா, டி வில்லியர்ஸ் என தென்னாப்பிரிக்க நட்சத்திர ஆட்டக்காரர்கள் அடுத்தடுத்து அவுட்டாக டூமினியும், பெஹர்டியனும் ஜோடி சேர்ந்து ஆடத் துவங்கினர். டூமினி 34 பந்துகளில் 68 ரன்கள் எடுத்தார். அவர் 7 சிக்ஸ், ஒரு ஃபோர் அடித்தார். அவரும் பெஹர்டியனும் சேர்ந்து தென்னாப்பிரிக்க அணியின் வெற்றிக்கு வழி வகுத்தனர்.
19.4 ஓவர்களில் தென்னாப்பிரிக்க அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்தது. இதையடுத்து இந்த போட்டியில் தென்னாப்பிரிக்க அணி இந்திய அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.