புனே: இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதலாவது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 260 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. அடுத்து பேட் செய்த இந்தியா 105 ரன்களில் சுருண்டது.
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, நான்கு போட்டிகள்கொண்ட பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் புனேயில் நேற்று தொடங்கியது. டாசில் வெற்றி பெற்ற ஆஸி. கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். ஆட்ட நேர இறுதியில் அந்த அணி 9 விக்கெட்டுகளை இழந்து 256 ரன்களை எடுத்திருந்தது.
மிட்சேல் ஸ்டார்க் 57 ரன்களுடனும், ஹசில்வுட் 1 ரன்னுடனும் களத்தில் நின்றனர். 2வது நாள் ஆட்டத்தை இன்று தொடங்கிய அந்த அணி மேற்கொண்டு 4 ரன்களை மட்டுமே சேர்த்து 260 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. அஸ்வின் பந்தில் பவுண்டரி அடித்து 61 ரன்களை எட்டிய ஸ்டார்க், அதே ஓவரில் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். ஹசில்வுட் 1 ரன்னுடன் அவுட்டாகாமல் நின்றிருந்தார்.
இதையடுத்து இந்தியா தனது முதல் இன்னிங்சை தொடங்கி ஆடியது. 40.1 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 105 ரன்கள் எடுத்தது. கோஹ்லி டக்அவுட்டானார்.
ஆஸி. சுழற்பந்து வீச்சாளர் ஓ'கீபே 6 விக்கெட்டுகளை சாய்த்தார். ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 155 ரன்கள் முன்னிலை பெற்று, 2வது இன்னிங்சை ஆடி வருகிறது.
சுழற்பந்து வீச்சுக்கு அதிகப்படியாக சாதகமாக உருவாக்கப்பட்ட பிட்ச் என்பதால், அது இந்தியாவுக்கே எதிராக முடிந்துவிட்டது.