கான்பூர்: இந்திய சுழற்பந்து வீச்சாளர்களின் அருமையாக பவுலிங்கில் சுருண்ட நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 262 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. இரண்டாவது இன்னிங்சில் அபாரமாக பேட் செய்த இந்திய அணி 215 ரன்கள் முன்னிலையில் வலுவாக உள்ளது.
முன்னதாக முதல் இன்னிங்சில் 318 ரன்களுக்கு இந்தியா ஆல்அவுட்டான நிலையில், நேற்றைய ஆட்ட நேர முடிவில் (மழையால் முன்கூட்டியே ஆட்டம் முடிவுக்கு வந்தது) நியூசிலாந்து அணி 1 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது.
இந்தியா தனது 500வது டெஸ்ட் போட்டியில் ஆடிவரும் நிலையில், நியூசிலாந்து கை ஓங்கியது ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தது. ஆனால் அஸ்வினும், ஜடேஜாவும் இன்று இந்தியாவுக்கு அபயம் கொடுத்தனர்.
ரவீந்திர ஜடேஜா 73 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளையும், அஸ்வின், 93 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி நியூசிலாந்தை மூட்டை கட்ட செய்தனர். உமேஷ் யாதவ் 1 விக்கெட் எடுத்தார். நியூசிலாந்து அணியின் கனே வில்லியம்சன் அதிகபட்சமாக 75 ரன்கள் எடுத்தார்.
இதனால் 56 ரன்கள் முன்னிலை பெற்ற இந்தியா தனது 2வது இன்னிங்சை முரளி விஜய் மற்றும் ராகுலுடன் தொடங்கியது. ஆட்ட நேர இறுதியில் இந்தியா, 1 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்திருந்தது.
லோகேஷ் ராகுல் 38 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், முரளி விஜய் 64 ரன்களுடனும், புஜாரா 50 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஒட்டு மொத்தமாக இந்திய அணி, 215 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது. நாளை 3வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.