டெல்லி: நியூசிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வியைத் தழுவியது.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் இன்று பகல்-இரவு மோதலாக நடந்தது.
டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் டோணி பீல்டிங் தேர்வு செய்தார். இதன் பின்னர் பேட்டிங் செய்த செய்த நியூசிலாந்து அணி கேன் வில்லியம்சன் (118) சதத்தால் 9 விக்கெட் இழப்பிற்கு 242 ரன்கள் சேர்த்தது.
இதையடுத்து 243 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இந்தியா. ரோகித் சர்மா, ரகானே ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ரோகித் சர்மா 25 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.
அதன்பின்னர் வந்த விராட் கோஹ்லி 9 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். ரகானே (28), மணீஷ் பாண்டே (19 ) எடுத்த நிலையில் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதனால் இந்தியா 19.2 ஓவரில் 73 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுக்களை இழந்தது.
ஐந்தாவது விக்கெட்டுக்கு கேப்டன் டோணியுடன் கேதர் ஜாதவ் ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறிது நேரம் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கேதர் ஜாதவ் 41 ரன்கள் எடுத்த நிலையில் பெவுலியன் திரும்பினார். டோணி 39 ரன்கள் எடுத்தபோது ஆட்டமிழந்தார். அக்சார் பட்டேல் (17), அமித் மிஸ்ரா (1) அடுத்தடுத்து அவுட்ஆகினர்.
இதனால் இந்திய அணி 40.5 ஓவரில் 183 ரன்கள் எடுப்பதற்குள் 8 விக்கெட்டுக்களை இழந்தது. 9-வது விக்கெட்டுக்கு ஹர்திக் பாண்டியாவுடன் உமேஷ் யாதவ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இந்தியாவை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றது. ஒருகட்டத்தில் 8 பந்திற்கு 11 ரன்கள் தேவையிருக்கும்போது பாண்டியா எதிர்பாராத விதமாக அவுட் ஆனார். அவர் 32 பந்தில் 3 பவுண்டரியுடன் 36 ரன்கள் சேர்த்தார்.
இதனால் கடைசி விக்கெட்டுக்கு 7 பந்தில் 11 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரில் இந்தியாவின் வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்டது. முதல் இரண்டு பந்தில் இந்தியா 3 ரன்கள் எடுத்தது. 3-வது பந்தில் பும்ப்ரா க்ளீன் போல்டானார். இதனால் இந்தியா 49.3 ஓவரில் 236 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆகி 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. நியூசிலாந்து அணியின் சவுத்தி 3 விக்கெட்டும், போல்ட் மற்றும் கப்தில் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.