கட்டாக்: ஒடிஷா மாநிலம் கட்டாக்கில் நடந்த தென்னாப்பிரிக்கா, இந்தியா இடையேயான 2வது டி20 கிரிக்கெட் போட்டியின்போது ரசிகர்கள் பிளாஸ்டிக் பாட்டில்களை மைதானத்தை நோக்கி வீசியதால் ஆட்டம் கைவிடப்பட்டது.
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையேயான டி20 தொடர் கடந்த வெள்ளிக்கிழமை தர்மசாலாவில் துவங்கியது. அந்த போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றது.
இந்நிலையில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் இரண்டாவது போட்டி நேற்று ஒடிஷா மாநிலம் கட்டாக்கில் உள்ள பாராபதி ஸ்டேடியத்தில் நடந்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 17.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 92 ரன்களே எடுத்தது. இதனால் ஸ்டேடியத்தில் இருந்த ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர்.
அவர்கள் இன்னிங்ஸ் மாறுகையில் மைதானத்தை நோக்கி பிளாஸ்டிக் பாட்டில்களை எறிந்தனர். மீண்டும் தென்னாப்பிரிக்க அணி பேட்டிங் செய்கையிலும் பாட்டில்களை வீசினர். இதையடுத்து வீரர்கள் விளையாடுவதை விட்டுவிட்டு சற்று நேரம் மைதானத்தில் காத்திருந்தனர். அதன் பிறகு தென்னாப்பிரிக்க வீரர்கள் மீண்டும் பேட்டிங் செய்தனர்.
மறுபடியும் ரசிகர்கள் பாட்டில்களை வீசியதால் ஆட்டம் கைவிடப்பட்டது. 13.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 70 ரன்கள் எடுத்த தென்னாப்பிரிக்கா தொடரை கைப்பற்றியுள்ளது. ரசிகர்களின் செயல் வீரர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.