நாக்பூர்: இங்கிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்தியா 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டி20 கிரிக்கெட் போட்டி, மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இன்று இரவு 7 மணியளவில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கன் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளில் தலா ஒரு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. இங்கிலாந்து அணியில் பிளங்கெட் நீக்கப்பட்டு சுழற்பந்து வீச்சாளர் டவ்சன் சேர்க்கப்பட்டார். இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் பர்வேஸ் ரசூல் நீக்கப்பட்டு மற்றொரு சுழல் பவுலரான, அமித் மிஸ்ரா சேர்க்கப்பட்டார்.
இந்திய அணிக்காக கேப்டன் விராட் கோஹ்லி, லோகேஷ் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். 15 பந்தில் 21 ரன்கள் சேர்த்த கோஹ்லி, ஜோர்டான் பந்து வீச்சில் டவ்சனிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
அதேநேரம், இங்கிலாந்துக்கு எதிரான, ஒருநாள் தொடர் மற்றும் முதல் டி20 போட்டியில் மோசமாக ஆடிய லோகோஷ் ராகுல் நிலைத்து நின்று விளையாடினார். அடுத்து வந்த ரெய்னா 10 பந்தில் 7 ரன்கள் எடுத்தும், யுவராஜ் சிங் 12 பந்தில் 4 ரன்கள் எடுத்தும் ஆட்டம் இழந்தனர். யுவராஜ் சிங் அவுட்டாகும்போது இந்தியா 10.3 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 69 ரன்கள் எடுத்திருந்தது.
4வது விக்கெட்டுக்கு லோகேஷ் ராகுல் உடன் மணீஷ் பாண்டே ஜோடி சேர்ந்தார். மணீஷ் பாண்டே ஆமை வேக ஆட்டம் ஆடினார். எனவே லோகேஷ் ராகுல் கியரை மாற்றி அதிரடி ஆரம்பித்தார். ராகுல் 32 பந்தில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் அரைசதம் அடித்தார். இதனால் இந்தியா 13.4 ஓவரில் 100 ரன்னைத் தாண்டியது.
18வது ஓவரில் ஜோர்டான் பந்து வீச்சில் லோகேஷ் ராகுல் அவுட் ஆனார். அவர் 47 பந்தில் 6 பவுண்டரி, 2 சிக்சருடன் 71 ரன்கள் சேர்த்தார். லோகேஷ் ராகுல், மணீஷ் பாண்டே ஜோடி 3வது விக்கெட்டுக்கு 6.5 ஓவரில் 56 ரன்கள் சேர்த்து ஓரளவுக்கு கை கொடுத்தது.
20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு இந்தியா 144 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதனால் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 145 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இங்கிலாந்து அணியில் ஜோர்டான் அதிகபட்சமாக 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். இந்திய தரப்பில் ராகுல் அதிகபட்சமாக 71 ரன்கள் விளாசினார். மனிஷ் பாண்டே 30 ரன்களும் எடுத்தனர். டோணி 5 ரன்களிலும், யுவராஜ் 4 ரன்களிலும் நடையை கட்டி அதிர்ச்சியளித்தனர்.
இதையடுத்து பேட் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 139 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் இந்தியா 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
கடைசி ஓவரில் வெற்றிக்கு 8 ரன்கள்தான் தேவை என்ற நிலையில் இங்கிலாந்து இருந்தது. ஆனால் பும்ரா அருமையாக பந்து வீசி வெற்றியை இந்தியா பக்கம் திருப்பினார். கடைசி ஓவரின் முதல் பந்தில் ரூட்டை எல்பிடபிள்யூ முறையில் வீழ்த்திய பும்ரா, 2வது பந்தில் மொயின் அலிக்கு 1 ரன் கொடுத்தார். 3வது பந்தை சந்தித்த பட்லரால் ரன் எடுக்க முடியவில்லை. 4வது பந்தில் பட்லரை பௌல்ட் செய்தார் பும்ரா. இதனால் கடைசி 2 பந்துகளில் இங்கிலாந்துக்கு 7 ரன்கள் தேவைப்பட்டது. 5வது பந்தை ஜோர்டான் சந்திக்க அதில், 1 ரன் கிடைத்தது. கடைசி பந்தில் 6 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் பந்தை சந்தித்த மொயீன் அலியால் ரன் ஏதும் எடுக்க முடியவில்லை. எனவே இந்த குறைந்த ஸ்கோர் கொண்ட த்ரில் மேட்சில் இந்தியா வெற்றி பெற்று தொடரை 1-1 என சமன்படுத்தியுள்ளது.
அந்த அணியில் அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோ ரூட் தலா 38 ரன்கள் எடுத்தனர். இந்திய தரப்பில் நெஹ்ரா 3 விக்கெட்டுகளையும், பும்ரா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.