லண்டன்: பாகிஸ்தானுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில், ரன் குவிப்பில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது இங்கிலாந்து.
இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டியின் முடிவில், இங்கிலாந்து அணி 2-0 என ஏற்கனவே முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையேயான 3வது ஒரு நாள் போட்டி இங்கிலாந்தில் உள்ள நாட்டிங்காம், டிரண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடந்தது. இப்போட்டியில் டாசில் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. துவக்கத்திலிருந்தே அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணி வீரர்கள் ரன் மழை பொழிந்தனர்.
இங்கிலாந்து வீரர்களின் அதிரடி ஆட்டத்தை பார்த்து பாகிஸ்தான் வீரர்கள் கதிகலங்கினர். அந்த அணியின் அலெக்ஸ் ஹேல்ஸ் 122 பந்துகளில் 171 ரன்களை குவித்து அசரவைத்தார். மேலும் ஜோ ரூட் 85 ரன்களும், ஜோஸ் பட்லர் 90 ரன்களும் எடுத்து அணிக்கு பலமான ரன்களை சேர்க்க துவங்கினர். 50 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 444 ரன்கள் எடுத்து புதிய உலக சாதனை படைத்துள்ளது.
இதற்கு முன்னர் இலங்கை அணி, 2006ல் நெதர்லாந்து எதிராக 443 ரன்கள் எடுத்திருந்ததே ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அடிக்கப்பட்ட அதிகப்பட்ச ரன்களாக இருந்து வந்தது. தற்போது இங்கிலாந்து அந்த சாதனையை முறியடித்துள்ளது.
இந்த போட்டியில் ரன் குவிப்பு மட்டுமின்றி வேறு பல சாதனைகளும் தகர்க்கப்பட்டுள்ளன. பாகிஸ்தான் பவுலர்கள் முகத்தில் ஈ ஆடாத அளவுக்கு வைத்து அடித்து நொறுக்கியுள்ளனர் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள்.
*இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஒருவர் குவித்த அதிகபட்ச ஒன்டே ரன் அலெக்ஸ் ஹேல்ஸ் விளாசிய 171 ஆகும். முன்பு, 1993ல், ஆஸி.க்கு எதிராக இங்கிலாந்து வீரர் ராபினஅ ஸ்மித் அடித்த 167 ரன்கள்தான் அதிகபட்சமாக இருந்தது.
பாகிஸ்தானின் முகமது அமீர் நேற்று 52 ரன்களுடன் நாட்-அவுட்டாக இருந்தார். 11வதாக களமிறங்கிய ஒரு வீரரின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.
அச்சுறுத்தும் பவுலர் என பூச்சாண்டி காட்டப்பட்ட, பாகிஸ்தானின் வகாப் ரியாஸ் நேற்று 110 ரன்களை அள்ளி கொடுத்து ஆனந்தம் அடைந்தார். முன்னதாக ஆஸி. வீரர் மைக் லீவிஸ் 113 ரன்களை கொடுத்ததுதான் ஒரு போட்டியில் பவுலர் கொடுத்த அதிகபட்ச ரன்னாகும். வகாப் ரியாஸ் இதில் 2வது இடம்.
2008ல் பவுல் காலிங்வுட் 24 பந்துகளில் 50 ரன்களை நியூசிலாந்துக்கு எதிராக குவித்திருந்த நிலையில், ஜோஸ் பட்லர் நேற்று 22 பந்துகளில் அரை சதம் கடந்தார். அந்த நாட்டு வீரர் ஒருவரின் அதிவேக ஃஹாப்-செஞ்சுரி இதுவாகும்.
இரண்டாவது விக்கெட்டுக்கு ஹேல்ஸ் மற்றும் ரூட் இணைந்து 248 ரன்கள் குவித்தது, பாகிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்தின் அதிகபட்ச 2வது விக்கெட் பார்ட்னர்ஷிப்பாகும்.
இப்போட்டியில் இங்கிலாந்து 16 சிக்சர்களை விளாசியது. அந்த அணியின் அதிகபட்ச சிக்சர் எண்ணிக்கை இதுவாகும்.
மே.இ.தீவுகளுக்கு எதிரான கடைசி டெஸ்ட் மழையால் பாதிக்கப்பட்டதால் புள்ளிகளை இழந்து டெஸ்ட் தர வரிசையில் 2வது இடத்துக்கு வந்தது இந்தியா. இதனால், எந்த முயற்சியும் இன்றி, தானாகவே முதலிடம் பிடித்தது பாகிஸ்தான்.
[டெஸ்ட் ரேங்க்கில் முதலிடமாம்.. கோஹ்லியை அசிங்கப்படுத்தி பாகிஸ்தான் ரசிகர்கள் மீம்ஸ்!]
இதற்காக கோஹ்லியை, பாக். கேப்டன் மிஸ்பா உல்-ஹக் அடித்து துவைப்பது போல மீம் உருவாக்கி புழகாங்கிதம் அடைந்திருந்தனர் பாகிஸ்தான் ரசிகர்கள். ஆனால் எப்போதும் ஆக்ரோஷம் காட்டும், கோஹ்லியோ, இந்தியா முதலிடம் பிடித்தபோது கூட, இது நிரந்தரம் இல்லை. அதில் கவலையும் இல்லை என்று பொறுப்பாக பேட்டி கொடுத்தார். இந்திய ரசிகர்களும் இதற்காக பாகிஸ்தானை வம்புக்கும் இழுக்கவில்லை.
இப்படி ஆட்டம் போட்ட பாகிஸ்தான் ரசிகர்கள் வாய்கள் இப்போது திண்டுக்கல் பூட்டு போட்டதை போல கப்-சிப் என மூடப்பட்டுள்ளது. ஏன்னா.. அடி அப்படி!