சிக்சர் மன்னர்
எஸ்.. டோணி தனது 281வது போட்டியில் விளாசிய 196 சிக்சர் அது. இதன் மூலம், அதிக சிக்சர்கள் விளாசிய இந்திய வீரர் என்ற பெருமையை சூடிக்கொண்டுள்ளார் டோணி. முன்னதாக, 195 சிக்சர்களுடன், சச்சின் அந்த சிம்மாசனத்தில் வீற்றிருந்தார். உலக அளவில் 'காட்டடி' அப்ரிடி இதில் முதலிடத்திலுள்ளார். அவர் விளாசிய சிக்சர்கள் 351.
இவங்களையும் பாருங்க
அதிக சிக்சர்கள் பட்டியலில் இலங்கையின் ஜெயசூர்யா 270 சிக்சர்களுடனும், மேற்கிந்திய தீவுகளின் கிறிஸ் கெயில் 238 சிக்சர்களுடனும், நியூசிலாந்தின் பிரெண்டன் மெக்கல்லம் 200 சிக்சர்களுடன், 2வது முதல் 4வது வரையிலான எண்ணிக்கைகளை பகிர்ந்து கொண்டுள்ளனர். அந்த வகையில், உலகின் 5வது சிக்சர் மன்னர் டோணிதான். சச்சின் தற்போது 6வது இடத்தில் உள்ளார்.
பெஸ்ட் சிக்சர்
டோணி எத்தனை சிக்சர்களை விளாசியிருந்தால், அவற்றுக்கு மகுடம் சூட்டியதும், மக்கள் மனங்களில் இருந்து மறையாததும் அந்த ஒரு சிக்சர்தான். அது எந்த சிக்சர் என்பது உங்களுக்கே புரிந்திருக்கும். 2011ம் ஆண்டு உலக கோப்பை பைனலில், இலங்கையின் குலசேகரா வீசிய பந்தை ஹெலிகாப்டர் ஷாட் மூலம் சிக்சருக்கு விளாசி, "Dhoni finishes off in style" என கமாண்டேட்டர்களை கத்தி கோஷமிட வைத்த அந்த சிக்சர்தான் அது.
பெரும் புள்ளிகளுடன்
மேலும், நேற்றைய போட்டியில் டோணி 9000 ரன்களை கடந்த 5வது இந்திய வீரர் என்ற எலைட் பேட்ஸ்மேன்கள் குழுவிலும் இடம் பிடித்துள்ளார். சச்சின், கங்குலி, ராகுல் டிராவிட், அசாருதீன் ஆகிய பெயர் சொல்லும் பிள்ளைகள் உள்ள இப்பட்டியலில் இப்போது டோணிக்கும் இடம் கிடைத்துள்ளது. இறுதி கட்டங்களில் களமிறங்கும் பழக்கம் கொண்டிருந்தபோதிலும், டோணி 9000 ரன்களை அனாயாசமாக கடந்துள்ளது சிறப்பு.