3வது டெஸ்ட்
மொகாலியில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வென்றது. பெங்களூரில் நடந்த 2வது டெஸ்ட் போட்டி மழையால் டிரா ஆனது. இந்நிலையில் நாக்பூரில் நேற்று மூன்றாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது.
முதல் இன்னிங்ஸ்
டாசில் வென்ற இந்திய கேப்டன் கோஹ்லி, தனது அணி முதலில் பேட்டிங் செய்யும் என தெரிவித்தார். முதல் இன்னிங்சில் இந்தியா 215 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. முரளி விஜய் அதிகபட்சமாக 40 ரன்கள் சேர்த்தார்.
ஆரம்பம் திணறல்
இதையடுத்து நேற்று மாலை பேட்டிங்கை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி, ஆட்ட நேர முடிவில், 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 11 ரன்கள் எடுத்திருந்தது. ஸ்டியான் வான் டக்அவுட்டான நிலையில், நைட் வாட்ச்மேன் தாகீர் 4 ரன்களில் நடையை கட்டினார்.
சுழல் ஆதிக்கம்
இன்று 2வது நாள், தனது ஆட்டத்தை தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா. ஆனால் சுழல்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாத அந்த அணி வீரர்கள் அடுத்தடுத்து நடையை கட்டினர். கேப்டன் ஆம்லா 1, டுப்ளசிஸ் 10, எல்கர் 7, டேன் விலாஸ் 1 ரன்களில் அவுட்டான நிலையில், டுமினி மட்டும் சற்று போராடி 35 ரன்கள் எடுத்தார்.
79 ரன்களில் சுருண்டது
நம்பிக்கை நட்சத்திரம், டிவில்லியர்ஸ், ஜடேஜா பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து டக் அவுட் ஆனார். மொத்தமே 33.1 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த தென் ஆப்பிரிக்க அணி 79 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. இதனால் இந்திய அணி முதல் இன்னிங்சில் 136 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
அஸ்வின் அபாரம்
இந்திய தரப்பில் அஸ்வின் 5 விக்கெட்டுகளையும், ஜடேஜா 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர். மிஸ்ரா ஒரு விக்கெட்டை சாய்த்தார். ஆகமொத்தம், தென் ஆப்பிரிக்க விக்கெட்டுகள் அனைத்துமே ஸ்பின் பந்துவீச்சாளர்களிடம் வீழ்ந்தன.
173 ரன்கள்
இதையடுத்து இந்தியா தனது 2வது இன்னிங்சை தொடங்கியது. தேனீர் இடைவேளை முடிந்த கொஞ்ச நேரத்துக்கெல்லாம், இந்தியா 173 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. இந்திய தரப்பில், தவான் அதிகபட்சமாக 39 ரன்களை எடுத்தார்.
இம்ரான் தாகிர்
புஜாரா 31 ரன்களும், ரோகித் ஷர்மா 23 ரன்களும் எடுத்த நிலையில், மற்ற வீரர்கள் மிக சொற்ப ரன்களில் நடையை கட்டினர். தென் ஆப்பிரிக்க தரப்பில் ஸ்பின்னர் இம்ரான் தாகிர் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளையும், வேகப்பந்து வீச்சாளர் மோர்க்கல் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
310 ரன்கள் இலக்கு
முதல் இன்னிங்சில் பெற்ற முன்னிலையையும் சேர்த்து தென் ஆப்பிரிக்காவுக்கு 310 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா. இதையடுத்து பேட் செய்ய வந்த தென் ஆப்பிரிக்கா ஆட்ட நேர இறுதியில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 32 ரன்கள் எடுத்துள்ளது. எல்கர் மற்றும் ஆம்லா களத்திலுள்ளனர். அஸ்வின், மிஸ்ரா தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.