கொழும்பு: இந்தியா - இலங்கை அணிகள் மோதும் 3வது மற்றும் கடைசி டெஸ்ட், கொழும்பு சிங்கள ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நேற்று தொடங்கியது.
டாசில் வென்ற இலங்கை முதலில் பவுலிங்கை தேர்ந்தெடுத்தது. ஆட்டம் தொடங்கிய சில மணி நேரங்களில் மழை பெய்ய தொடங்கியதால் நாள் முழுவதும் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இன்று மழை ஓய்ந்துள்ளதால் ஆட்டம் தொடர்ந்து நடந்தது. ஆட்ட நேர இறுதியில் இந்தியா 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 292 ரன்கள் குவித்தது.
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. காலே மைதானத்தில் நடந்த முதல் டெஸ்டில், 63 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இலங்கை அணி 1-0 என முன்னிலை பெற்றது.
கொழும்பு சரவணமுத்து ஓவல் மைதானத்தில் நடந்த 2வது டெஸ்டில், அபாரமாக விளையாடிய இந்திய அணி 278 ரன் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது. இரு அணிகளும் 1-1 என சமநிலை வகிக்க, 3வது மற்றும் கடைசி டெஸ்ட் கொழும்பு எஸ்எஸ்சி மைதானத்தில் நேற்று தொடங்கியது.
இந்திய அணியிலும் தொடக்க வீரர்கள் முரளி விஜய், ஷிகர் தவான், விக்கெட் கீப்பர் விருத்திமான் சாஹா ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ள நிலையில், லோகேஷ் ராகுலுடன் இணைந்து புஜாரா இன்னிங்சை தொடங்கினார்.
14 ரன்களுக்கே ராகுல், ரஹானே ஆகிய 2 விக்கெட்டுகளை இந்தியா இழந்த நிலையில், கேப்டன் விராட் கோஹ்லி மற்றும் புஜாரா ஆகியோர் இணைந்து விக்கெட் சரிவை தடுத்தனர். 15 ஓவர்களில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 50 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டது. மழையால் ஆட்டம் தடைபட்ட நிலையில், தொடர்ந்து விடாமல் மழை பெய்ததால், மாலை 4 மணியளவில் ஆட்டம் முடித்துக்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து இன்று காலை வழக்கத்தைவிட 15 நிமிடங்கள் முன்பாக ஆட்டம் ஆரம்பித்தது. 90 ஓவர்களுக்கு பதிலாக 98 ஓவர்கள் வீசப்பட வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டது. பிட்சிலுள்ள புல் தன்மை காரணமாக பந்து அதிகமாக ஸ்விங் ஆவதால் கோஹ்லி, புஜாரா ஜோடி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
இருப்பினும் அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தன. கோஹ்லி-18, ரோகித் ஷர்மா-26, நமான் ஓஜா-21, அஸ்வின்-5 ரன்களிலும், ஸ்டூவர்ட் பின்னி ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். ஆனால் எட்டாவது விக்கெட்டாக புஜாராவுடன் ஜோடி சேர்ந்த அமித் மிஸ்ரா அபாரமாக ஆடி 59 ரன்கள் குவித்து அசத்தினார்.
ஈரப்பதம் காரணமாக இன்றைய ஆட்டம் சற்று வேகமாக முடிவுக்கு வந்தநிலையில், புஜாரா 135 ரன்களுடனும், இஷாந்த் ஷர்மா 2 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்த பிட்ச்சில் பந்துகள் தாறுமாறாக ஸ்விங் ஆகிவந்தபோதிலும், புஜாரா பொறுப்பாக ஆடியது குறிப்பிடத்தக்கது.
இலங்கை தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் தம்மிகா பிரசாத் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.