நாக்பூர்: இந்தியா-தென் ஆப்பிரிக்கா நடுவேயான 3வது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற 319 ரன்களை இலக்காக இந்தியா நிர்ணயித்த நிலையில், அந்த அணி 124 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதையடுத்து 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இன்னும் ஒரு போட்டி எஞ்சியுள்ள நிலையில், இந்தியா தொடரை வென்றுவிட்டது.
மொகாலியில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வென்றது. பெங்களூரில் நடந்த 2வது டெஸ்ட் போட்டி மழையால் டிரா ஆனது. இந்நிலையில் நாக்பூரில் நேற்றுமுன்தினம், மூன்றாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது. டாசில் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது.
முதல் இன்னிங்சில் 215 ரன்களிலும், 2வது இன்னிங்சில் 173 ரன்களிலும் இந்தியா ஆட்டமிழந்த நிலையில், தென் ஆப்பிரிக்க அணி தனது முதல் இன்னிங்சில் 79 ரன்களில் சுருண்டது. எனவே 2வது இன்னிங்சில் அந்த அணி 310 ரன்களை எடுத்தால் வெற்றி பெற முடியும் என்று இலக்கு நிர்ணயமானது.
இதையடுத்து நேற்று மாலை, பேட் செய்ய வந்த தென் ஆப்பிரிக்கா ஆட்ட நேர இறுதியில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 32 ரன்கள் எடுத்திருந்தது. எல்கர் மற்றும் ஆம்லா களத்தில் இருந்தனர்.
மூன்றாம் நாளான இன்று ஆட்டத்தை தொடர்ந்த தென் ஆப்பிரிக்க அணியில், எல்கர் 18 ரன்களிலும், டிவில்லியர்ஸ் 9 ரன்களிலும் அவுட் ஆகினர். இதனால் அந்த அணி 58 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்தது. இருப்பினும், ஆம்லா மற்றும், டுப்ளசிஸ் ஜோடி ஓரளவு தாக்குப்பிடித்து ஆடியது.
இந்த ஜோடி நிலைத்து நின்றதை பார்க்கும்போது, ஆட்டம் இந்தியாவின் கையைவிட்டு போய்விடுமோ என்ற கிலி ரசிகர்களிடம் ஏற்பட்டது. ஆனால், ஸ்கோர் 130 ரன்களாக இருந்தபோது, அமித் மிஸ்ரா வீசிய பந்தில் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து 39 ரன்களில் நடையை கட்டினால் ஆம்லா.
இதையடுத்து ஸ்கோர் 135 ரன்களாக உயர்ந்தபோது, டுப்ளசிசை கிளீன் பௌல்ட் ஆக்கி, அடுத்தடுத்து ரசிகர்களை குஷிப்படுத்தினார் மிஸ்ரா. தேனீர் இடைவேளையின்போது, தென் ஆப்பிரிக்க அணி 6 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்து திணறியது.
மேலும் சிறிது நேரத்திலேயே 185 ரன்களில் தென் ஆப்பிரிக்கா ஆல்-அவுட் ஆனது. இந்தியா 124 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய அஸ்வின், 2வது இன்னிங்சிலும் விக்கெட் வேட்டை நடத்தி 66 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தி தனது பெஸ்ட் பந்து வீச்சை பதிவு செய்தார்.
ஐசிசியில் உலகின் நம்பர் ஒன் அணியாக உள்ள தென் ஆப்பிரிக்கா, கடந்த 9 வருடங்களில் வெளிநாட்டு மண்ணில் டெஸ்ட் தொடரையே இழந்தது இல்லை என்ற பெருமையை இந்தியா இன்று தகர்த்துவிட்டது.