ராஞ்சி: இந்தியா - ஆஸ்திரேலியா இடையில் நடைபெறும் 3-வது டெஸ்ட் போட்டியில் முதல் நாள் மதிய நேர ஆட்டத்தின் போது விராத் கோஹ்லிக்கு வலது தோள் பட்டையில் காயம் எற்பட்டது. இதனால் அவர் மைதானத்தை விட்டு வெளியேறினார்.
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதனைத்தொடர்ந்து தனது ஆட்டத்தை துவங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 299 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் கேப்டன் ஸ்மித் 117(244) ரன்களுடனும், மேக்ஸ்வெல் 82(147) ரன்களுடனும் களத்தில் உள்ளனர். .
ஆட்டத்தின் 40-வது ஓவரை ஜடேஜா வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை ஹேண்ட்ஸ்காம்ப் வேகமாக அடித்தார். பந்து பௌண்டரிக்கு செல்லாமல் பாய்ந்து தடுத்தார் கோஹ்லி. அப்போது அவரது வலது தோள்பட்டை தரையில் பலமாக தாக்கியது.
இதையடுத்து, மிகுந்த வலியுடன் காணப்பட்ட கோஹ்லி மைதானத்தை விட்டு வெளியேறினார். அவருக்கு பதிலாக துணைக் கேப்டன் ரகானே அணியை வழிநடத்துகிறார். தொடர்ந்து கோஹ்லிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் இன்றைய போட்டியில் அவர் களமிறங்குவாரா அல்லது ஓய்வு எடுப்பாரா என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.