தரம்சாலா: தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இருந்து இந்திய கேப்டன் விராட் கோஹ்லி விளையாடுவது உறுதியாகவில்லை. இந்நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. புனேயில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா 333 ரன்கள் வித்தியாசத்திலும், பெங்களூருவில் நடந்த 2 வது டெஸ்டில் இந்தியா 75 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன.
இவ்விரு அணிகள் இடையிலான 3 வது டெஸ்ட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்றது. அந்த டெஸ்ட் டிராவில் முடிவடைந்தது. இதனிடையே அன்றைய போட்டியின் போது விராட் கோஹ்லிக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. அதனால் அவர் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் காயம் காரணமாக நாளை தொடங்க உள்ள 4வது டெஸ்டில் விராட் கோஹ்லி பங்கேற்பதில் சிக்கல் உள்ளது. இதை உறுதிப்படுத்தும் வகையில் தரம்சாலாவில் நேற்று நடைபெற்ற பயிற்சியில் விராட் கோஹ்லி ஈடுபடவில்லை. இந்நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.